ஸ்ரீநகரில் 25 வெளிநாடுகளின் தூதர்கள் குழு- காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து ஆராய 25 வெளிநாடுகளின் தூதர்கள் குழு இன்று ஸ்ரீநகர் சென்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் வீட்டு காவல்களிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒரு பகுதியினர் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் இந்தியாவுக்கான வெளிநாடுகளின் தூதர்கள் குழு ஒன்று ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது. அங்கு மக்கள் பிரதிநிதிகள், ராணுவத்தினர் உள்ளிட்டோரை சந்தித்து நிலவரங்களை விசாரித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று 25 நாடுகளைச் சேர்ந்த 2-வது தூதர்கள் குழு ஸ்ரீநகர் சென்றுள்ளது. இதில் கனடா, ஆஸ்திரியா, உஸ்பெகிஸ்தான், உகாண்டா, ஸ்லோவேகியா குடியரசு, நெதர்லாந்து, நமீபியா, கிரிகிஸ் , பல்கேரியா, ஜெர்மனி, தஜிகிஸ்தான், பிரான்ஸ், மெக்சிகோ,டென்மார்க், இத்தாலி, ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து, போலந்து மற்றும் ருவாண்டா நாடுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
1998-ஆம் ஆண்டு முதல்.. 22 ஆண்டுகளாக அரியணைக்காக முட்டி மோதல்.. டெல்லியில் அரசியல் நெருக்கடியில் பாஜக
முதல் கட்ட தூதர் குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்கள் பங்கேற்கவில்லை. இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம். சி.ஏ.ஏ. ஆகியவை தொடர்பாக எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் பத்திரிகையாளர்கள், பழ உற்பத்தியாளர்கள், மக்கள் இயக்க பிரதிநிதிகள் ஆகியோரை இந்த குழு சந்தித்து நிலவரங்களை கேட்டறியும். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்முவையும் வெளிநாடு தூதர்கள் குழு சந்திக்கும்.