விநாயகரைக் கிண்டலடித்த ராம் கோபால் வர்மாவுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!
மும்பை: தனது சமூகவலைதளப் பக்கத்தில் இந்துக் கடவுளான விநாயகரைக் கிண்டல் செய்த ராம் கோபால் வர்மாவுக்கு, மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பிருக்கிறது.
டோலிவுட் இயக்குநரான ராம் கோபால் வர்மாவுக்கு பிரபலமான நடிகர்கள், இயக்குநர்களைக் கிண்டல் செய்வது கைவந்த கலை. தற்போது கூட ரஜினியைக் கிண்டல் செய்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விநாயகரைக் கிண்டல் செய்திருந்தார். இது இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாக இவர்மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த போலீசார் ராம் கோபால் வர்மா விநாயகரைக் கிண்டல் செய்தது உண்மைதான் என்று நீதிமன்றத்தில் அறிக்கையளித்தனர்.
போலீசாரின் அறிக்கையைத் தொடர்ந்து ஜூலை 19 தேதிக்கு முன் நேரில் ஆஜராகுமாறு, ராம் கோபால் வர்மாவுக்கு மும்பை அந்தேரி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது.