எம்.பி.பி.எஸ் சீட்.. புரோக்கர்களிடம் ஏமாந்து விடாதீர்கள், உஷார்.. மத்திய அரசு எச்சரிக்கை
மாணவர்கள் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறும் இடைத் தரகர்களிடம் ஏமாறாதீர்கள் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
டெல்லி: எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு, பிடிஎஸ் பல் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் ஏமாற வேண்டாம் என மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைக் குறிவைக்கும் இடைத்தரகர்கள் சிலர் அவர்களிடம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறித்து ஏமாற்றும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இது குறித்த பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியானாலும் பெற்றோர்களிடமோ மாணவர்களிடமோ விழிப்புணர்வு ஏற்படுவது என்பது குறைவுதான்.
இந்நிலையில், சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சீட்டுகளை பெற்றுத் தருவதாகவும் அதே போல, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் சீட்டுகளைப் பெற்றுத் தருவதாகவும் சில இடைத் தரகர்கள் மாணவர்களை பெற்றோர்களை அனுகுகின்றனர். இடைத் தரகர்கள் சீட் வாங்கித் தருவதற்காக பெற்றோர்களிடம் பெரிய அளவில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றும் சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கவுன்சில் குழுவானது இத்தகைய எந்த நடைமுறைகளையும் ஊக்குவிப்பதில்லை. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இட ஒதுக்கீடுகள் நீட் தேர்வு தரவரிசையின் அடிப்படையில் இணைய தள கலந்தாய்வின் மூலமே நடைபெற்று வருகின்றன. மேலும், அந்தந்த கல்லூரிகளில் நிரப்பப்படும் இடங்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடைத்தரகர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இடைத்தரகர்களின் வலையில் விழுந்து பணத்தை இழந்தால் அதற்கு மத்திய சுகாதாரத்துறையோ, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககமோ, மருத்துவக் கலந்தாய்வுக் குழுவோ, எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்று தெரிவித்துள்ளது.