மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் இந்திய தென் மாநிலங்கள்தான்!
டெல்லி: மாற்றுத் திறனாளிகளின் நலன் தொடர்பான சேவைகளில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக இந்தியாஸ்பெண்ட்ஸ் கட்டுரை புள்ளிவிவரத்துடன் தெரிவிக்கிறது.
இந்தியாவிலேயே அதிக அளவிலான மாற்றுத் திறனாளிகள் இருப்பது உத்தரப் பிரதேசத்தில்தான். அதாவது அங்கு 40.15 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்ளை விட இங்குதான் இது அதிகம்.
அதேசமயம், உ.பியை விட 45 சதவீதம் குறைவான மாற்றுத் திறனாளிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில், மிகச் சிறந்த வகையில் மத்திய அரசு வழங்கும் நிதி அவர்களுக்காக செலவிட்படுகிறதாம்.
சரியாக சென்று சேரும் நிதி:
என்.ஜி.ஓ நிறுவனங்கள் மூலமாகவும், மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் நிதியினை வழங்கி வருகிறது. இவையும் சரியான முறையில் செலவிடப்படுகிறதாம். மத்திய அரசு இந்த என்.ஜி.ஓக்களுக்கு கடந்த 2012-13, 2013-14, 2014-15 ஆகிய ஆண்டுகளில் வழங்கிய நிதி ஒதுக்கீட்டுத் தகவல்களை அடிப்படையாக வைத்து இந்தியாஸ்பெண்ட்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஆந்திராவுக்கு அதிகம்:
ஆந்திராவில் நாட்டின் மொத்த மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கையில் 8.45 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அளவு மொத்த நிதியில் 28.63 சதவீதமாகும். மேலும் ஆந்திராவுக்கே அதிக அளவிலான நிதியும் வழங்கப்படுகிறது. அதாவது உ.பிக்குக் கிடைப்பதை விட 2 மடங்கு அதிகமாகவே கிடைக்கிறது.
தீன்தயாள் திட்டம்:
1999 ஆம் ஆண்டு சிறந்த முறையில் இந்த நிதிப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வகையில், மத்திய அரசு அனைத்துத் திட்ங்களையும் ஒருங்கிணைத்து ஒரே திட்டமாக மாற்றியது இந்தத் திட்டத்திதற்கு தீன்தயாள் மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வுத் திட்டம் என கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பெயரிடப்பட்டது.
கேரளா இரண்டாம் இடத்தில்:
ஆந்திராவுக்கு அடுத்த கேரளாவுக்கு அதிக நிதி செல்கிறது. இங்கு மொத்த மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கையில் 2.84 சதவீதம் பேர்தான் உள்ளனர்.
அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 01.13 சதவீத நிதி ஒதுக்கீடு கிடைக்கிறது. இந்த மாநிலத்தின் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை 2.87 சதவீதமாகும்.
மாநில அரசுகளே காரணம்:
இப்படி நிதி ஒதுக்கீட்டில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் காரணம், சில மாநில அரசுகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று ஜெய்ப்பூரைச் சேர்ந்த உமங்க் என்ற அமைப்பைச் சேர்ந்த இயக்குநர் தீபக் கல்ரா கூறுகிறார்.
தமிழகத்திலும் அதிகம்:
இந்தப் பட்டியலில் தமிழகம், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களிலும் முறையே 4.40, 4.64 சதவீத மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இருப்பினும் ஒடிசாவுக்குக் கிடைத்ததை விட பாதி அளவிலான நிதியே தமிழகத்திற்குக் கிடைத்தள்ளது. இருப்பினும் ஒடிசாவை விட (5.58 சதவீதம்), தமிழகம் அதிக அளவிலான மாற்றுத் திறனாளி பயனாளிகளைக் கொண்டுள்ளது. அதாவது 12.13 சதவீதமாகும்.
பீகாருக்கு மூன்று:
இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ள 3 ஆவது பெரிய மாநிலம் பீகார். ஆனால் மத்திய அரசின் நிதியைப் பெறும் டாப் 15 மாநிலங்களில் பீகார் இடம் பெறவில்லை. ஆனல் டாப் 10 பட்டியலில் மணிப்பூர் உள்ளது. இங்கு வெறும் 54,110 மாற்றுத் திறனாளிகளே உள்ளனர்.
மிகவும் குறைவு:
மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஆந்திரா, கேரளா, உ.பி, ஒடிசாவில் மட்டும் மொத்தம் 56.98 சதவீத நிதி போகிறது. ஆனால் இங்கு நாட்டின் மொத்த மாற்றுத் திறனாளிகள் மக்கள் தொகையில் 31.44 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.