பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. அணியில் மாஞ்சிக்கு அதிக தொகுதிகளா? பாஸ்வான் கடும் அதிருப்தி!!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் கட்சி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகார் முன்னாள் முதல்வர் மாஞ்சியின் அவாமி மோர்சாவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதால் அவர் அதிருப்தி அடைந்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டதால் சமாஜ்வாடி கட்சி வெளியேறிவிட்டது. இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொகுதி பங்கீடு அறிவிப்பு
இதேபோல் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மத்திய அமைச்சர் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, மத்திய அமைச்சர் உபேந்திராவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, பீகார் முன்னாள் முதல்வர் மாஞ்சியின் அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த அணியில் பா.ஜ.க. 160; லோக் ஜனசக்தி 40; ராஷ்டிரிய லோக் சமதா கட்சி- 23; மாஞ்சியின் மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிடும் என்று நேற்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்திருந்தார். மேலும் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்து எந்த ஒரு அதிருப்தியும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முதல் யோசனை
ஆனால் இத்தொகுதி பங்கீட்டால் பாஸ்வானின் லோக் ஜனசக்தி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. முதலில், மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 75%-ல் போட்டியிடுவது; எஞ்சிய தொகுதிகளை லோக் ஜனசக்தியும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியும் பகிர்ந்து கொள்வது என ஒரு யோசனையை முன்வைத்திருந்தது.
லோக்சபா தொகுதியில் 6 இடங்கள்
அதன் பின்னர் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவை கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுமே அந்தந்த கட்சிகளுக்கே ஒதுக்கப்படும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
மாஞ்சிக்கு எத்தனை இடம்?
இந்த நிலையில் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது. இதனால் அந்த கட்சிக்கு 12 தொகுதிகளை ஒதுக்குவது எனவும் ஆலோசிக்கப்பட்டது. அதுவும் பா.ஜ.க. தன்னுடைய கோட்டாவில் இருந்து 9 தொகுதிகளையும் லோக் ஜனசக்தி 2 தொகுதிகளையும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஒரு தொகுதியையும் விட்டுக் கொடுப்பது எனவும் விவாதிக்கப்பட்டது.
திடீரென மாஞ்சிக்கு அதிகம்
இதனடிப்படையில் லோக் ஜனசக்திக்கு 40, ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு 17, அவாமி மோர்ச்சாவுக்கு 12 இடங்கள் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவாமி மோர்ச்சா தலைவர் மாஞ்சி இதனை திட்டவட்டமாக ஏற்க மறுத்து பிடிவாதமாக இருந்தார். இதனால் தற்போது அவரது கட்சிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது லோக் ஜனசக்தியை அதிருப்தி அடைய வைத்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வோ, நான் ஒரு தலித் என்பதாலேயே முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமாரால் தூக்கியடிக்கப்பட்டேன் என்ற மாஞ்சியின் பிரசாரம் பெருமளவு தலித் வாக்குகளை தங்களுக்கு இழுத்துவிடும் என கருதுகிறது. அதனால்தான் அந்த கட்சிக்கு 20 இடங்களைக் கொடுத்ததாக கூறுகிறது.
பாஸ்வான் கட்சி குமுறல்
பா.ஜ.க. கூட்டணியின் சீனியர் கட்சியான தங்களை மதிக்காமல் இந்த முடிவை பா.ஜ.க. எடுத்துவிட்டது என்பது பாஸ்வானின் லோக் ஜனசக்தியின் அதிருப்தி. மேலும் இதர இரு கட்சிகளுக்கும் கூடுதல் இடங்களை ஒதுக்கியுள்ள போது தங்களுக்கும் கூடுதல் தொகுதி ஒதுக்கியிருக்க வேண்டும் என்பதும் பாஸ்வான் கட்சி நிர்வாகிகள் கருத்து.
அதிர்ச்சிதான்.. அதிருப்தி இல்லை
இதனிடையே டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம் விலாஸ் பாஸ்வானின் மகனும் லோக்சபா எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் இது தொடர்பாக கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எங்களிடம் முன்னர் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு இல்லாததுதான் அதற்கு காரணம். இதில் லேசான மன வருத்தம் லோக் ஜனசக்தி தொண்டர்களுக்கு உண்டு.. அதற்காக நாங்கள் அதிருப்தி அடைந்துவிடவில்லை. இது தொடர்பாக எங்களது கருத்துகளை நேற்று இரவு கேட்டுக் கொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சிராக் பாஸ்வான் கூறினார்.