சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வில் 4 அதிருப்தி நீதிபதிகளுக்கு இடமில்லை! தலைமை நீதிபதி அதிரடி
உச்சநீதிமன்ற சாசன அமர்விலிருந்து அதிருப்தி நீதிபதிகள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என அட்டார்னி ஜெனரல் கே.கே.வேண
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வழக்குகள் வழிமுறைகள்படி ஒதுக்கப்படவில்லை என்றும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலையீடு அதிகளவில் உள்ளது என்றும், உச்சநீதிமன்ற நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என்றும் உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதிகள் 4பேர் சில தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டினர்.
மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து இந்த பிரச்சனைகளை பகிரங்கமாக எடுத்துரைத்தனர்.
அதனைத்தொடர்ந்து நான்கு நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்தில் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டனர். இதுதொடர்பாக தலைமை நீதிபதியை அவர்கள் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு எந்த சந்திப்பும் நடைபெறாமல் இருந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் எழுந்த பிரச்சனை முடிவுக்குவந்து விட்டதாக அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அறிவித்தார். இந்நிலையில், பல்வேறு முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய 5 பேர் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பட்டியலில், தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்த 4 மூத்த நீதிபதிகளில் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இந்தநிலையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தலைமை நீதிபதிக்கும், 4 மூத்த நீதிபதிகளுக்கும் இடையிலான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரம் அலசப்படுவதாகவும், விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.