உத்தராகண்ட் விவகாரம்: நாள் முழுக்க முடங்கியது ராஜ்யசபா.. லோக்சபாவில் சட்டங்கள் நிறைவேற்றம்
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு நடுவே, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் (2வது கட்ட தொடர்) இன்று கூடியது. உத்தராகண்ட் மாநில விவகாரம் பற்றி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு தர்ணா செய்ததால் ராஜ்யசபா நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபா கூச்சல், குழப்பம் நடுவே நடைபெற்றது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி தொடங்கி மார்ச் 16ம் தேதி வரை நடந்தது. இந்த தொடரின் போது டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது சம்பவம், விஜய் மல்லையா கடன் மோசடி, அருணாச்சல பிரதேச அரசியல் விவகாரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
இதனால் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும், நாடாளுமன்ற தொடர் பெரும்பாலும் சுமுகமாக நடந்தது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை திருத்த மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதுடன், 2 அவசர சட்டங்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
உத்தராகண்ட் விவகாரம் மீது தொடரின் முதல் நாளான இன்றைக்கே விவாதம் நடத்துவதற்காக ராஜ்யசபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நோட்டீசு அளித்தது. இதற்கு இடதுசாரிகள், ஐக்கிய ஜனதாதளம் போன்ற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதுதவிர வறட்சி மேலாண்மை, இஸ்ரத் ஜகான் வழக்கு, பதன்கோட் தீவிரவாத தாக்குதல், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.
ராஜ்யசபா இன்று கூடியதும், அவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், உத்தராகண்ட் மாநில விவகாரத்தை கிளப்பினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். ஜனநாயகத்தை கொல்லாதே, சர்வாதிகார ஆட்சி நடத்தாதே.. என்பது போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. சபாநாயகர் இருக்கை முன்பு வந்து கோஷமிட்டனர்.
இதனால் மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, அவை கூடியபோதும் கோஷம் தொடர்ந்ததால் அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்ட ராஜ்யசபா, அலுவல் ஏதும் நடைபெறாமலேயே, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதேநேரம் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் இதே பிரச்சினைக்காக கோஷமிட்டனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது. இருப்பினும் அலுவல் பாதிக்கப்படவில்லை. சர்ச்சைக்குறிய சீக்கியர்கள் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
தாடி, தலைமுடியை ட்ரிம் அல்லது வெட்டும் சீக்கியர்கள் அவர்களுக்கான அமைப்பில் வாக்களிக்க வாய்ப்பளிக்க மறுக்கப்படுவர்.. என்பது இந்த சட்டத்தின் சாராம்சம்.