அரசை எதிர்ப்பது 'தேச துரோகம்' அல்ல.. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரபரப்பு பேச்சு
அஹமதாபாத்: அரசை எதிர்ப்பதை 'தேச துரோகம்' என்று முத்திரை குத்துவது என்பது ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கங்களின் இதயத்தின் மீதான தாக்குதல்' என உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் இந்தியா முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக டெல்லி ஷாஹீன்பாக்கில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அரசை எதிர்ப்பதை தேச துரோகம் என்று முத்திரை குத்துவது ஜனநாயகத்தின் இதயத்தின் மீதான தாக்குதல் என்று விமர்சித்துள்ளார்.
ஜனநாயக எதிர்ப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத் உயர்நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் 15 வது பி.டி. தேசாய் நினைவு சொற்பொழிவை நிகழ்த்திய நீதிபதி சந்திரசூட், பேசுகையில், " அரசாங்கத்தை எதிர்ப்பதை 'தேச துரோகம் " என்று முத்திரை குத்துவதோ, அல்லது 'ஜனநாயக எதிர்ப்பு' என்று முத்திரை குத்துவதோ 'அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் சுதந்திரம் மிக்க ஜனநாயகம் ஆகியவை ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்களின் இதயத்தின் மீதான தாக்குதல் ஆகும்.
அரசுகளுக்கு உரிமையில்லை
ஜனநாயக ரீதியில தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் வளர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஆகியவற்றுக்கான சட்டபூர்வமான வழிமுறைகளை அளிக்கின்றன. இருப்பினும், பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை பற்றிய விழுமியங்கள் மற்றும் அடையாளங்கள் மீது தங்களுக்கு மட்டுமே ஆதிக்கம் இருப்பதாக எந்த அரசுகளும் உரிமை கொண்டாட முடியாது.
கேள்வி எழுப்புதல்
ஜனநாயகத்தில் கருத்து வேற்றுமை, எதிர்ப்பு, கேள்வி எழுப்புதல் போன்றவை சமூகத்தில், அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூக அடிப்படையில் உள்ள இடைவெளிகளை உடைக்கிறது. அதாவது ஜனநாயகத்தின் சேஃப்டி வால்வு போன்று கருத்து வேற்றுமை, எதிர்ப்பு இருந்து வருகிறது. எதிர்ப்புகளை, கருத்து வேற்றுமைகளை அடக்குவதும், மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதும்,தனிப்பட்ட சுதந்திரங்களை மீறுவதும் போன்றவை அரசியலமைப்பு மதிப்புகளுக்கு அப்பாற்பட்டதாகிவிடும
தண்டனை கிடைக்காது
ஜனநாயகத்தின் உண்மையான பரிசோதனை என்பது, ஒவ்வொரு தனிநபரும் தங்கள் கருத்துக்கு தண்டனை கிடைக்காது என்ற அச்சமின்றி தெரிவிக்கத் தகுந்த இடைவெளியே உருவாக்கி, பாதுகாப்பை அரசு உறுதி செய்வது தான். அதேசமயம், கருத்து வேற்றுமைகளுக்குப் பரஸ்பர மரியாதையும், பாதுகாப்பும், அதைத் தெரிவிக்க போதுமான இடைவெளியும் முக்கியம் ஆகும்.
பேச்சுரிமை
பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் சட்டத்துக்கு உட்பட்டுப் பாதுகாத்து உறுதி செய்யவேண்டியது அரசின் அவசியமாகும். அச்சத்தை உருவாக்கும், பேச்சு சுதந்திரத்தை அடக்கும் முயற்சிகளை அரசு நீ்க்க வேண்டும். வேற்றுமைகளை அடக்குவதும், எதிர்த்தரப்பு கருத்துக்கள், குரல்களை ஒடுக்குவதும் பன்முக சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். சிந்திக்கும் புத்தியை அடக்குவது என்பது, தேசத்தை அல்லது மனசாட்சியை அடக்குவதாகும்" இவ்வாறு நீதிபதி சந்திசூட் கூறினார்