அசாம் முதல்வர் தருண் கோகாய் மீது நம்பிக்கையில்லை: ஆளுநரிடம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மனு
கவுகாத்தி: அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் தலைமையில் நம்பிக்கையில்லை என்று ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 30 பேர் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ள நிலையில், அசாம் அரசு கவிழும் அபாயம் எழுந்துள்ளது.
தேர்தலில் படுதோல்வி
அசாம் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக தருண் கோகாய் பதவி வகிக்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அசாமில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. வடகிழக்கு மாநிலங்களில் பிரசித்தி பெறாத பாஜக 7 தொகுதிகளை வென்றது.
பதவி விலக கோரிக்கை
இந்த தேர்தல் தோல்வி காரணமாக தருண் கோகாய் பதவியைவிட்டு விலக்கப்பட வேண்டும் என்று அசாம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலித்தன. எம்.எல்.ஏக்கள் சுமார் 30 பேரும் இதே கோரிக்கையை முன்வைத்தனர்.
ராகுல்காந்தி ஆதரவு
ஆனால் தருண் கோகாய் பதவியை பறிக்க காங்கிரசின் துணை தலைவர் ராகுல்காந்தி குறுக்கே நிற்பதாக கூறப்படுகிறது. அவரது ஆதரவு காரணமாக தருண் கோகாய் பதவி தப்பியது. இதை விரும்பாத அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முப்பது பேரும், ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று மனு அளிக்க தீர்மானித்தனர்.
கார்கே ஆய்வு
அவ்வாறு மனு அளித்தால், சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர், அசாம் சட்டசபை சபாநாயகரை கேட்டுக்கொள்வார் என்பது எம்.எல்.ஏக்கள் திட்டம். இதை தடுக்க நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுனகார்கேவை அசாமுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ் தலைமை. நிலைமையை நேரில் ஆய்வு செய்து அறிக்கையளிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
ஆளுநருடன் சந்திப்பு
இந்நிலையில், அசாம் முதல்வர் தருண் கோகாய்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி ஆளுநர் ஜானகி பல்லாப்பை சந்தித்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று மனு அளித்தனர்.
கவிழும் அபாயம்
அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் காங்கிரசின் பலம் 78 ஆக உள்ளது. இதில் 30 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் ஆட்சி கலையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காணுவாரா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.