கொளுத்தப்பட்ட பட்டாசுகள்.. தலைநகரை மூடிய புகை... நாசமானது டெல்லி காற்று!
டெல்லி: தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தலைநகர் டெல்லியில் காற்றின் தன்மை மேலும் மோசமடைந்துள்ளது.
2014ம் ஆண்டில் உலகில் உள்ள 1,600 நகரங்களில் காற்றின் தரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இருப்பதிலேயே டெல்லியில் தான் காற்று அதிகம் மாசுபட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது காற்று மாசுபட முக்கிய காரணம் ஆகும்.
முக்கியக் காரணம்...
டெல்லி சாலைகளில் தினமும் 85 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும், 1,400 கார்களும் ஓடுகின்றன. இது தவிர குப்பைகள் எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவையும் காற்றை மாசுபட வைக்கின்றன.
கார்கள் இல்லாத தினம்...
இதனால், டெல்லியில் வாகனங்களின் புகையைக் குறைக்கும் வகையில், கார்கள் இல்லாத தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்து அரசு பேருந்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்படுத்தி வருகிறார்.
தீபாவளி...
இந்தச் சூழ்நிலையில், தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விதவிதமான பட்டாசுகளை வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
பட்டாசுகள்...
பட்டாசு வெடிப்பது நமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், காற்றை மாசடைய செய்துவிடுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு கனமழை கொட்டியதால், தீபாவளியின்போது பெரும்பான்மை நேரம் பட்டாசு வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு குறைந்தது.
டெல்லி...
ஆனால் நாட்டின் தலைநகரான டெல்லியில் நிலைமை தலைகீழாக உள்ளது. அங்குள்ளவர்கள் அதிகளவில் பட்டாசு வெடித்ததால் காற்றின் தன்மை மேலும் மோசமடைந்துள்ளது. பல இடங்களில் எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டமாக இருந்தது.
நாக்பூர்...
இதேபோல நாக்பூரிலும் தீபாவளி தினத்தன்று பெருமளவில் பட்டாசுகள் வெடித்ததால் உருவான புகையால் காற்று மாசடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.