புகை நகரமான தலைநகரம் - தீபாவளி பட்டாசுகளால் டெல்லியில் காற்று மாசுபாடு
மக்களின் அதிகப்படியான தீபாவளிக் கொண்டாட்டங்களால் டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவைத் தொட்டது.
டெல்லி : தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாடு அபாயகரமான அளவைத் தொட்டது. குறிப்பாக ஆனந்த் விஹார் இந்தப்பட்டியலில் 740 புள்ளிகளில் முதல் இடத்தில் இருக்கிறது.
தீபாவளிக் கொண்டாட்டங்களால் டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவைத் தொட்டது. தனியார் இணையதளம் ஒன்று டெல்லியின் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறது
நேற்றைய அளவீட்டின்படி, டெல்லி முழுக்க காற்று மிகவும் மோசமாக மாசுபட்டிருக்கிறது. குறிப்பாக ஆனந்த் விஹார் இந்தப்பட்டியலில் 740 புள்ளிகளில் முதல் இடத்தில் இருக்கிறது. இது மிகவும் அபாயகரமானது. இதை அடுத்து பஞ்சாபிபாக் பகுதியும், ஆர்.கே புரம் பகுதியும் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன. இப்போது வரை அந்தப்பகுதிகள் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
தடை விதித்த உச்ச நீதிமன்றம்
காற்று மாசுபடுதலைக் குறைக்க கடந்த அக்டோபர் 9-ம் தேதி உச்சநீதிமன்றம், நவம்பர் 1 வரை டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இருந்தபோதும் மக்கள் அதனைப்பற்றி கவலை இல்லாமல் பட்டாசுகளை வாங்கி குவித்தனர்.
மோசமடைந்தது
தீபாவளி நாளன்று டெல்லியின் காற்று மாசுபாடு தீவிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாக சூழலியலாளர்கள் முன்கூட்டியே அறிவித்து இருந்தார்கள். அதுபோலவே, நேற்று தீபாவளி பட்டாசுகளால் மிக மோசமாக நிலையை அடைந்தது.
முன்கூட்டியே எச்சரிக்கை
இதுகுறித்து காற்று மாசுபாட்டைக் கண்காணிக்கும் மத்திய அரசின் முகமை ஒன்று ஏற்கனவே அரசுக்கு இந்த நிலை குறித்து தெரியப்படுத்தி இருந்தது. அதில் டெல்லியை சுற்றி இருக்கும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நெல் வயல்களை எரிப்பதாலும், காஸிப்பூர் மலைத்தொடர்களில் ஏற்பட்ட காற்றுத்தீயினாலும் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து மக்கள் சுவாசிக்க முடியாத சூழல் ஏற்படும் என்று சொல்லி இருந்தது.
யார் யாருக்கு விதிவிலக்கு?
இதனால் வருகிற செவ்வாய்க்கிழமை வரை பாதர்பூர் மின்நிலையமும், அது போல டெல்லியைச் சுற்றி உள்ள பகுதிகளில் டீசல் பயன்பாட்டையும் குறைக்க திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதில் மருத்துவமனைகள் மற்றும் மெட்ரோ நிர்வாகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.