டி.கே.ரவி ஐ.ஏ.எஸ்: நேர்மைக்கு பரிசு மரணமா? கொதிக்கும் மக்கள்!!
பெங்களூரு: பெங்களூருவில் வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் போலீஸார் சந்தேகித்துள்ளது.
மணல் கடத்தலுக்கு எதிராக திறம்பட செயல்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, கோலார் மாவட்டத்தில் மக்கள் கொதிப்படைந்தனர். கண்டதை எல்லாம் அடித்து உடைத்து நொறுக்கிய அவர்கள், நேர்மையான அதிகாரிக்கு பரிசு மரணம்தானா என்று கேட்டனர். ஆனால் கேள்வி கேட்ட மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இளமையான, திறமையான அதிகாரி
டி.கே.ரவி சாதாரண ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல. 2013-ல் கோலார் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றது முதல் மணல் கடத்தல், சாலைப் பணிகள் முறைகேடுகள், புறம்போக்கு நில அபகரிப்புகள், ஏரிகள் ஆக்கிரமிப்புகள், வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் என பல விவகாரங்களில் திறம்பட செயல்பட்டவர்.
ஏழை குடும்பம்
ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ரவிக்கு சொந்த ஊர் தும்கூர் மாவட்டத்தில் உள்ள தொட்டகொப்பலு கிராமம் படிப்பில் கெட்டிக்காரரான ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் குல்பர்கா, பெல்காம் ஆகிய மாவட்டங்களில் உதவி கலெக்டராக பணி புரிந்தார்.
கோலார் மாவட்டத்தில்
2013ஆம் ஆண்டு கோலார் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். அப்போது அங்கு மணல் கடத்தல், சாலைப் பணிகள் முறைகேடுகள், புறம்போக்கு நில அபகரிப்புகள், ஏரிகள் ஆக்கிரமிப்புகள் ஆகிய சமூக விரோத செயல்கள் மலிந்து கிடந்துள்ளன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார் ரவி. இதனால் கோலார் மாவட்டத்தில் பல பெரும் புள்ளிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார். தொடர்ந்து பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கைகளை கட்டவிழ்க்க 2014 அக்டோபரில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் ரவி.
மக்கள் நாயகன்
1 வருடம் 9 மாத காலம் கோலாரில் பணி. அங்கு அவர் சம்பாதித்தது மக்கள் மனத்தையும், மணல் மாபியாக்களின் எதிர்ப்பையும். டி.கே.ரவியை பணியிட மாற்றம் செய்ததை எதிர்த்து கோலார் பகுதி மக்கள் 2 நாட்கள் மறியல் நடத்தியுள்ளனர். இதுவே அவருக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கு.
28முறை இடமாற்றம்
அதிகாரத்தில் காலூன்றி நின்ற அரசியல் புள்ளிகள் மீதும் இவர் நடவடிக்கை எடுக்கத் தவறியதில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், உதிரிக் கட்சிகள் என யாரிடமும் பாரபட்சமின்றி தனது கடமையை மட்டும் செய்து வந்துள்ளார். இவர் தனது 5 வருட பணி காலங்களில் மொத்தம் 28 முறை இடம் மாற்றப்பட்டுள்ளார்.
அதிரடி ரவி
பணியிட மாற்ற உத்தரவை ஏற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி பணியில் சேர்கிறார். வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையர் பொறுப்பு. அங்கும் தொடர்கிறது அவரது அதிரடி நடவடிக்கை. வரி ஏய்ப்பு செய்யும் பெரும் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் இவர் கவனத்தில்பட ரெய்டுகள் பல நடத்தியிருக்கிறார். இவரது நடவடிக்கையால் கடந்த மூன்று மாதங்களில் கோடிக் கணக்கில் வரி வசூலாகியிருக்கிறது. திங்கட்கிழமை காலை அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவரை பின்னர் உறவினர்கள் சடலமாகத்தான் கண்டுள்ளனர்.
கொலையா? தற்கொலையா?
முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அவரது வீட்டில் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் இல்லை. இந்த மரணம் சந்தேகத்துக்குரியது என அவரது உறவினர்களும் சொல்கின்றனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ரவியின் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி கோலார் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில், முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
குடும்பத்தில் பிரச்சினையில்லை
ரவியின் அகால மரணம் குறித்து அவரது சகோதரர் கூறும்போது, "ரவி தன் பணியில் மிகவும் நேர்மையானவர். அவருக்கு குடும்பத்தில் எவ்வித நெருக்கடியும் இல்லை. திருமணமாகிவிட்டது. அவரது மனைவி பெயர் குசும். இருவருக்கும் இடையே எந்த சச்சரவும் இல்லை.
மணல் மாஃபியாக்கள்
ஆனால், மணல் மாஃபியாக்கள் மீதான நடவடிக்கை, வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீதான நடவடிக்கை காரணமாக அவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்துவந்தது. அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன.
நிழல் உலக தாதாக்கள்
துபாயில் இருந்து நிழல் உலக தாதாக்கள்கூட ரவியை மிரட்டினர். ஆனால், அவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார். ரவி மன தைரியம் நிறைந்தவர். அவர் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது" என்றார்.
கடமை தவறாத அதிகாரியின் அகால மரணம் கர்நாடக மக்களை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியிருக்கிறது. வழக்கமான அதிகாரியாக மட்டுமின்றி, மக்களின் தோழனாகத் திகழ்ந்த டி.கே.ரவிக்கு ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மரணத்துக்கு நீதிகேட்டு கொதித்தெழுந்துள்ளனர்..