கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை பறிகொடுத்த பரிதாப தேமுதிக, காங், பா.ம.க.!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் கடந்த முறை பெற்ற தமது வாக்கு சதவீதத்தை தேமுதி, காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை பறிகொடுத்து பரிதாப நிலைக்குப் போயுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலில் இரட்டை இலக்க எண்களில் வாக்கு சதவீதத்தை வைத்திருந்த கட்சிகள் இப்போது ஒற்றை இலக்கத்துக்கு மாறியுள்ளன.
சரிபாதி பறிபோன தேமுதிக
கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 10.8% சதவீத வாக்குகளைப் பெற்றது. தற்போது பாஜக கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சி 5.1% வாக்குகள் என்ற ஒற்றை இலக்கத்துக்குள் சுருங்கிப் போய் படுத்துக் கொண்டது.
படுதோல்வி அடைந்த காங்.
கடந்த தேர்தலில் திமுக அணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 15.03% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
தடுமாறிப் போன பா.ம.க.
பாமகவும் கடந்த தேர்தலில் 6.28% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் இம்முறையோ 4.4% வாக்குகளைத்தான் பெற முடிந்துள்ளது. அதுவும் மெகா கூட்டணியில் இடம்பெற்றும் கூட இதைத்தான் எட்ட முடிந்துள்ளது.
சாதித்த பாஜக
தமிழகத்தில் பாஜக கடந்த தேர்தலில் 2.3% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால், இந்தத் தேர்தலில் 5.5% வாக்குகளைப் பெற்றதுடன், ஒரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றுள்ளது.
தக்க வைத்த மதிமுக
மதிமுக மட்டுமே தனது வாக்கு சதவீதத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் 3.67% வாக்குகளைப் பெற்றது. அது இப்போது 3.5% என சற்று குறைந்துள்ளது.