கெய்ல் எரிவாயு குழாய் பதிக்க அனுமதித்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தேமுதிக சீராய்வு மனு
டெல்லி: தமிழகத்தில் விளைநிலங்கள் வழியே கெய்ல் இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதி அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தேமுதிக இன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
கேரளாவின் கொச்சியில் இருந்து கர்நாடகாவின் மங்களூருக்கு இயற்கை குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல கெய்ல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயு குழாய்கள் தமிழகத்தின் 7 மேற்கு மாவட்ட விவசாய விளைநிலங்களில் பதிக்கவும் அது திட்டமிட்டிருந்தது.
இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கில் கெய்ல் எரிவாயு குழாய்களை விளைநிலம் வழியே பதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
இதனிடையே தேமுதிகவின் கொள்கைபரப்பு செயலர் சந்திரகுமார், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் கெய்ல் எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதி அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.