தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து: தமிழக அரசு சீராய்வு மனு மீது ஏப்.26-ல் விசாரணை
டெல்லி: தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணை ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது.
சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமார், முதல்வர் பற்றி விமர்சனம் செய்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அமளி உருவானது.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சபை காவலர்களை தாக்கிய தாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களான மோகன்ராஜ், பார்த்திபன், சந்திரகுமார், தினகரன், வெங்கடேசன், சேகர் ஆகிய தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், இடை நீக்கம் செய்யப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 26-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.