தமிழகத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக தலைமை தேர்தல் ஆணையரிடம் கனிமொழி எம்.பி. புகார்
டெல்லி: தமிழகத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாகவும் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் நைதியிடம் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி புகார் அளித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி புதன்கிழமை டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது, அவர் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக கூறி புகார் மனுக்களை அவர்களிடம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. சார்புடைய அதிகாரிகள் சிலரின் செயல்பாடுகள் பற்றி மிகுந்த சர்ச்சை எழுந்து உள்ளது. கட்சியினரின் அத்துமீறல்கள் குறித்து எத்தனை புகார் அளித்தாலும் சில அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. கண்கூடாகவும் வெளிப்படையாகவும் பல பொருட்கள் மக்களிடம் வினியோகிக்கப்படுகின்றன.
ஒரு அமைச்சர் எதிர்க்கட்சி தலைவர்களை மிகவும் தரக்குறைவாக பேசியிருக்கிறார். அந்த புகார் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தமிழகத்தில் பலவகையிலும் அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று வருகிறது. எந்த அதிகாரி தங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என்பதை அரசாங்கம் கண்டறிந்து அந்த அதிகாரிகளை தேவையான இடங்களில் நியமனம் செய்கிறார்கள். தூரமாக மாற்ற வேண்டிய அதிகாரிகளை பக்கத்திலேயே மாற்றுகின்றனர்.
பல்வேறு அதிகாரிகளின் ஒரு தரப்பு சார்பான செயல்பாடுகள் குறித்தும் அதிகார துஷ்பிரயோகம் பற்றியும் தமிழக தலைமை தேர்தல் கமிஷனரிடம் தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.