ஹவாய் செப்பல் போட்டிருப்பவர் பசியோடவா விமானத்தில் பறக்க முடியும்... திருச்சி சிவா நறுக் கேள்வி!
ஹவாய் செப்பல் போட்டிருப்பவரும் விமானத்தில் பறக்கலாம் என்று மத்திய அரசு சொல்கிறது, ஆனால் வெற்று உடம்புடனும் பசியோடுமா பயணிக்க முடியும் என்று திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சமூக நலத்திட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் திமுகவால் எப்போதோ நிறைவேற்றப்பட்டு விட்டதாக திமுக எம்பி திருச்சி சிவா ராஜ்யசபாவில் பேசியுள்ளார். மத்திய பட்ஜெட் என்பது ஆண்டுக்கான அறிவிப்புகளாக இல்லாமல் எதிர்காலத் திட்டங்களாக மட்டுமே உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் பற்றி ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : சமூக நீதியில் திமுக எப்போதுமே முதல் இடத்தில் இருக்கிறது. சமூக நலத்திட்டங்களை நாட்டிலேயே முதன்முறையாக மக்களுக்கு அளிப்பதில் திமுக மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை திமுக எப்போதோ தமிழகத்தில் நிறைவேற்றிவிட்டது. மருத்துவ காப்பீடு திட்டம், உழவர் சந்தை, மகப்பேறு நிதியுதவி, ஏழை குடும்பத்தினருக்கு இலவச சமையல் எரிவாயு திட்டம் என அனைத்துமே தமிழகத்தில் தான் முதன்முதலில் திமுகவால் அறிமுகம் செய்யப்பட்டது.
திமுக முன்னோடி
2022ல் நாட்டின் அனைத்து கிராமங்களும் மின்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு பட்ஜெட்டில் கூறியுள்ளது. 1972லே தமிழக கிராமங்களுக்கு திமுக ஆட்சியில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. 50 ஆண்டுகளுக்கு முன்பே திமுக தலைவர் கருணாநிதியால் கிராமங்களுக்கு மின்வசதி செய்யப்பட்டுவிட்டது.
மாநில கட்சிகளின் திட்டங்கள்
மாநிலக் கட்சிகளின் திட்டங்களை மத்திய அரசுகள் தங்களின் அறிவிப்புகளாக செயல்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. ஓட்டல் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக நிதியமைச்சர் குறைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டிராக்டரை கமர்ஷியல் வாகனங்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கருப்புப்பணம் ஒழிக்கப்பட்டுவிட்டதா?
பணமதிப்பிழப்பால் அமைப்புசாரா துறை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் நிதியமைச்சர் பணமதிப்பிழப்பால் நாட்டிற்கு நல்லது நடந்துள்ளதாகவும் கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. அரசு 2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகிவிடும் என்று கூறியுள்ளது. பட்ஜெட் என்பது ஆண்டுக்கான திட்டமா அல்லது ஐந்தாண்டு திட்டமா என்ற கேள்வி எழுகிறது. ஆண்டுக்கான பட்ஜெட் என்றால் இந்த ஆண்டிற்கான அறிவிப்புகளாக இல்லாமல் அனைத்துமே எதிர்கால அறிவிப்புகளாக உள்ளன.
கண்டுகொள்ளப்படாத விவசாயம்
விவசாய நிலங்கள் சுருங்கி வருகின்றன, விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் வந்து போராடிய விவசாயிகளை கண்டுகொள்ள ஆளில்லை, நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் விவசாயத்துறையை முன்னேற்ற எஎந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று எந்த அடிப்படையில் மத்திய அரசு சொல்கிறது. மத்திய பட்ஜெட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை அனைத்துமே புள்ளிவிவரங்களாக மட்டுமே உள்ளன. இதற்கான நிதி மூலதன எங்கிருந்து வரும் என்று அரசு தெளிவுபடுத்தவில்லை. வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வித் துறை முன்னேற்றம் பற்றி பட்ஜெட்டில் சிறப்பான அம்சங்கள் எதுவுமே இல்லை.
பசியோடவா போக முடியும்
ஹவாய் செப்பல் போட்டுக்கொண்டிருப்பவரும் பிளைட்டில் பறக்கலாம் என்று மத்திய அரசு சொல்கிறது. நாங்கள் ஹவாய் செப்பல் போட்டுக் கொண்டு விமானத்தில் பறக்க தயாராக இருக்கிறோம், ஆனால் வெற்று உடம்புடனும், வயிற்றுப் பசியுடனும் பயணிக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.