தேர்தல் ஆணையர் சம்பத், பிரவீண் குமார் மீது வழக்கு: ஜனாதிபதியிடம் அனுமதி கோரும் திமுக
டெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் சம்பத், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் திமுக ராஜ்யசபா எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் அவர்கள் ஜனாதிபதியிடம் தந்த மனுவில்,
ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற முறையிலும்...
தமிழ்நாட்டில் 14வது நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியதில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் (வி.எஸ்.சம்பத்), தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரும் பிரவீண் குமார்) அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுப்பதற்காக தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தீயநோக்குடன் மிகவும் ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற முறையிலும் நடந்துகொண்டனர். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர்கள் செயல்பட்டதால், அரசியலமைப்பின் மிக உயரிய அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை குலைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம்..
வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து அதிமுகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாலும் அக்கட்சி செய்த முறைகேடுகளைக் கட்டுப்படுத்தாததாலும் மட்டுமே அது 37 இடங்களில் வென்றுள்ளது.
யாருக்கு ஓட்டு போட்டாலும் இரட்டை இலைக்கே...
நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திட்டமிட்டே அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதா?. வேறு கட்சியின் தேர்தல் சின்னத்தில் வாக்காளர்கள் செலுத்தும் வாக்கு, 'இரட்டை இலை' சின்னத்துக்கு விழும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக மோசடி செய்யப்பட்டதா? போன்ற சந்தேகங்களை எழுப்புகிறது.
அஸ்ஸாம், மகாராஷ்டிரத்தில் நடந்த தில்லுமுல்லு போலவே...
அஸ்ஸாம் மாநிலத்திலும், மகாராஷ்டிரத்தின் புனே நகரிலும்கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல, தமிழகத்தில் மாநிலம் முழுவதும் முறைகேடு நடைபெற தேர்தல் ஆணையம் காரணமாக இருந்திருக்கலாம் என்ற புகாரை திமுக முன்வைக்கிறது.
அம்மா, அம்மா, அம்மா...
தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு அரசுத் திட்டங்களில் 'அம்மா' என்ற பெயரும், 'இரட்டை இலை' அதிமுக தேர்தல் சின்னமும் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கோரியது. ஆனால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் திமுக பொருளாளர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
பெயரளவுக்கே.. பெயரளவுக்கே..
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் சின்னம் இடம்பெற்ற 'அம்மா' மினரல் வாட்டர் பாட்டில்களில் பொறிக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மறைக்கப்பட்டது. ஆனால், அதுவும் பெயரளவுக்கே செய்யப்பட்டது.
எம்ஜிஆர் நினைவிடத்தில் வடிவமைக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மறைக்கக் கோரியபோது, ''தேர்தல் நடத்தை விதிகளுக்கு முன்பே அது இடம்பெற்றுள்ளது. அதனால் மறைக்க வேண்டியதில்லை'' என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ராமானுஜம் என்ற ஐபிஎஸ் உயரதிகாரி...
தமிழகத்தில் அதிமுக அரசு 2011ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும், கே. ராமானுஜம் என்ற ஐபிஎஸ் உயரதிகாரியை நியமிப்பதற்காக உளவுப் பிரிவுத் தலைமை இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டது. அப்பதவியை அவர் ஏற்ற மறுநாளே சட்டம்- ஒழுங்குப் பிரிவு தலைமை இயக்குநராக (பொறுப்பு) நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந் நடவடிக்கையால், அவருக்கு முன்பு பதவி மூப்பில் சட்டம்-ஒழுங்குப் பிரிவுத் தலைமை இயக்குனராக நியமிக்க தகுதி பெற்றிருந்த 6 உயரதிகாரிகளுக்கு வாய்ப்பு பறி போனது. பதவியில் இருந்து ஓய்வு பெற ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், முழு நேர தலைமை இயக்குநராக ராமானுஜம் 2012ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி நியமிக்கப்பட்டார்.
போலீஸ் டிஜிபி பதவிக்கு நியமிக்கப்படுபவர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் நெறிகளுக்கு முரணாக இந்த நடவடிக்கை அமைந்தது. இதன் காரணமாக, ராமானுஜத்தின் ஓய்வூதியக் கால பலன்கள், மாதச் சம்பளம் போன்றவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. அவரது நியமனத்துக்கு எதிரான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதிமுகவுக்கு சாதகமாக ராமானுஜம்...
இதனால், ஆளும் அதிமுகவுக்கு சாதகமாகவே ராமானுஜம் செயல்படுவார் எனக் கருதுவதால் அவரை மாற்றக் கோரி தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் தெரிவித்தது. ஆனால், அவரை மாற்றாமல், தேர்தல் விவகாரங்களைக் கவனிக்க போலீஸ் டிஜிபி பதவியை உருவாக்கி அதற்கென ஒரு அதிகாரியை ஆணையம் நியமித்தது. தேர்தலின்போது பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்களைக் குறிவைத்து பொய் வழக்குகள் பதிவு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அது தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் விதிகளை மீறி தேர்தல் விளம்பரங்களை ஆளும் அதிமுக செய்தது.
144 தடை உத்தரவு...
2011ம் ஆண்டு தேர்தலின்போது டி.ஜி.பி.யாக இருந்த லத்திகா சரணை மாற்றிய தேர்தல் ஆணையம் ராமானுஜத்தை மாற்றாமல் இழுத்தடித்து தாமதமாக 5.4.2014ல்தான் அனூப் ஜெய்ஸ்வாலை நியமித்தது. ஆனால் தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவதும், மிரட்டப்படுவதும், பிரச்சார பணிகளை தடுப்பதும் தொடர்ந்தது. இப்படி தமிழகத்தில் 2 டிஜிபிக்கள் செயல்பட்டனர்.
இவை அனைத்தும் அதிமுகவுக்கு சாதகம் செய்ய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டன. தமிழகத்தின் வரலாற்றில் இல்லாதவகையில் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆளுங்கட்சியினர் தங்குதடையின்றி பணம் வினியோகிக்க வழிவகுக்கப்பட்டது.
இரவு 10 மணிக்கு மேல் கூட வீடு வீடாக...
இரவு 10 மணிக்கு மேல் கூட வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டலாம் என்று பிரவீண் குமார் கூறினார். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையரும், தலைமைத் தேர்தல் அதிகாரியும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டணைக்குரிய குற்றம்...
இது ஊழல் தடுப்பு சட்டம் 13 (1) (பீ) பிரிவின் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும்.
எனவே குடியரசுத் தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் மீது சட்டப்படி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த விசாரணை முடியும்வரை ‘தவறான இயந்திரங்கள்' என்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்படக்கூடாது, பாதுகாக்கப்பட வேண்டும்.
வழக்கு தொடுக்க குடியரசுத் தலைவர் அனுமதி...
தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் மீது உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம். தலைமைத் தேர்தல் அலுவலர் பிரவீண் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைக்குமாறும் குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. புகார்களுக்கு ஆதாரமாக, 22 இணைப்பு மனுக்களையும் அளித்துள்ளனர்.