காஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம்... இந்தியா - பாக்.,கிற்கு வேண்டுகோள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் எடுக்க வேண்டாம் என்று அம்மாநில அனைத்துக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனது இல்லத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய பின்னர் பேசிய பரூக் அப்துல்லா, அமைதியை நிலைநாட்டுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் "காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில்" ஒன்றுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக ஊழலை ஒரு கருவியாக மத்திய அரசு, பயன்படுத்துவதாக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டினார்.
பரூக் அப்துல்லாவின் இல்லத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மெஹபூபா முப்தி மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் நிலவும் பதற்றம் தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், அங்கு நிலவும் பதற்றம் தொடர்பாக ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் முன்னாள் முதல் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மாலை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.