வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை பகலில் வெளியே நடமாட வேண்டாம்.. மத்திய அரசு அறிவுறுத்தல்
பாட்னா: நாடு முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத வெப்பத்தால் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும், பல மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் வெயிலால், பீகார் மாநிலத்தில் மட்டும் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர். Heat Stroke எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு, பீகாரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றி கவலை தெரிவித்துள்ள மருத்துவர்கள், கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி மருத்துவமனைகளுக்கு வந்தபடி உள்ளனர். இவர்களுக்கென பல அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் துவக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வெப்ப வாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால், கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் வெப்ப வாதம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
செம வெயில் அடிக்கும்.. அனல் பறக்கும்.. கவனமா இருங்க.. வெதர்மேன் அட்வைஸ்
பீகாரில் பாட்னா, அவுரங்காபாத், கயா உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த பகுதிகளில் இயல்பைவிட 9 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கயாவில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பாட்னாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவானதால், வரும் புதன்கிழமை வரை அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் கொடுமையான வெப்ப அலைகள் வீசி வருகின்றன. இதனால் தார் சாலைகள் கூட உருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொடுமையாக சுட்டெரிக்கும் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அம்மாநிலத்திலும் பலர் மரணமடைந்துள்ளனர்.
மண்டையை பிளக்கும் வெயில் பற்றி கருத்து தெரிவித்துள்ள அம்மாநில மக்கள், இதுபோன்றதொரு வெப்பத்தை இதுவரை பார்த்தது இல்லை. வாட்டி வதைக்கும் வெயிலால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என கூறியுள்ளனர்
உச்சக்கட்ட வெப்பம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது பற்றி கூறிய மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கடும் வெயிலுக்கு மக்கள் உயிரிழந்து வருவது உண்மையிலேயே வேதனை அளிப்பதாக கூறினார்.
வெப்பத்தின் தாக்கம் இயல்புக்கு திரும்பும் வரை மக்கள் பகல் நேரங்களில் அதிகம் வெளியே நடமாட வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார். உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் மிக மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது