சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது ஏன்? லாபத்தை விட பாரம்பரியமே முக்கியம் என்கிறதா டாடா சன்ஸ்?
மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி ஏன் நீக்கப்பட்டார் என்பது போர்டு அறையின் மர்மமாகவே நீடித்து வருகிறது.
சிறு உண்மை என்னவென்றால், டாடா குரூப் என்பது 57 நிறுவனங்களின் தொகுப்பு. இதில் 20 நிறுவனங்கள் ஆண்டுதோறும் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளன. இது ஒரு வாடிக்கை நிகழ்வு. சில நிறுவனங்கள் கவுரவமான லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ்சின் ஜேஎல்ஆர் பிரிவு ஆகிய இரண்டும்தான், டாடா குரூப்புக்கு கை நிறைய லாபத்தை சம்பாதித்து கொடுக்கின்றன. இதிலிருந்துதான் அந்த குரூப்பின் எஞ்சிய நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது.
டிசிஎஸ்சுக்கும் ஆட்டம்
ஆனால், அந்த இரு நிறுவனங்களும் கூட ஆட்டம் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோட்டிக் டெக்னாலஜிஸ் வருகை, இந்திய ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சீனாவின் பொருளாதார மந்த நிலை, டாடாவின், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் போன்ற கார்கள் விற்பனையில் சரிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
குடும்ப பாரம்பரியம்
முலாயம்சிங் குடும்பத்தை போலவே டாடா சன்ஸ் நிறுவனத்திற்குள்ளும் குடும்ப பெயரை காக்கும் சண்டை நடப்பதாக கூறுகிறார்கள் தொழில் வல்லுநர்கள். 1938 முதல் பக்கா தொழில் பக்தியோடு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் எப்படி குடும்ப சண்டை நடக்கும் என்ற சந்தேகம் எழலாம்.
டாடா நிறுவனத்தை உருவாக்கியது ஜம்செட்ஜி டாடா. அவரது மகன் டோரப் டாடா 1904ல் பொறுப்பேற்றார். பிறகு ஜாம்செட்ஜி டாடாவின் சகோதரி மகன், நவ்ரோஜி சக்லத்வாலா 1932ல் டாடா தலைமை பொறுப்பேற்றார்.
உறவுக்கு வெளியே தலைவர்
1938ல் அவர் மறைந்த பிறகு, ஜம்செட்ஜியின் உறவினர் அல்லாத ஜேஆர்டி டாடா தலைமை பொறுப்புக்கு வந்தார். அவர்தான் 1991ம் ஆண்டுவரை டாடா குழுமங்களின் தலைவராக பதவி வகித்தார். பிறகு இன்னொரு டாடா குடும்பத்தை சாராதவரான ரத்தன் டாடாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். உறவினர்களாக இல்லாத போதும், டாடா என்ற பெயர் இக்குழும தலைவர்களின் பின்னால் ஒட்டிக்கொள்வது வழக்கம்.
தப்பான செய்திகள்
தேசிய பத்திரிகைகள் கூட சைரஸ் மிஸ்திரிதான், டாடா குழுமத்தில், ரத்த சம்மந்தம் இல்லாத 2வது தலைவர் என்று செய்தி வெளியிட்டுவருவது வியப்பளிப்பதாக உள்ளது. ஏனெனில், கடைசியாக டாடா நிறுவனரின் ரத்த சம்மந்தப்பட்ட உறவுக்காரர் ஒருவர், அக்குழு தலைவராக இருந்தார் என்றால் அது நவ்ரோஜி சக்லத்வாலாதான்.
பாரம்பரியத்தை காக்க பலி
நஷ்டமடையும் தொழில்நிறுவனங்களை விற்பனை செய்ய சைரஸ் மிஸ்திரி எடுத்த முடிவு, தொழிலதிபர் என்ற வகையில் ஏற்க்கத்தக்கது. ஆனால், டாடா உருவாக்கி வைத்துள்ள பாரம்பரியத்திற்கு எதிரானது. டாடா தனது நிறுவனங்களை இழக்க விரும்பவில்லை. இதுதான் இப்பிரச்சினையின் மையப்புள்ளி. தொழிலை காக்க சைரஸ் மிஸ்திரி எடுத்த முடிவுகளை, தங்கள் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியாக பார்க்கிறது டாடா சன்ஸ். இப்போது சைரஸ் மிஸ்திரியை நீக்கி ரத்தன் 'டாடா' அப்பதவிக்கு வந்துள்ளதன் மூலம், இது சாத்தியமாகியுள்ளது. டாடா கைகளில் டாடா சன்ஸ் இருப்பதாக மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர்.
கஷ்டமான வேலை
பிஸ்சாவும், கூல்ட்ரிங்சும் விற்பனை செய்யும் வேலை கிடையாது டாடா சன்ஸ் குழுமத்தை நிர்வகிப்பது என்பது. பல்வேறு தொழில்கள், அதில் பலவும் லாபமீட்டாதவை என சிக்கலின் உறைவிடம் அந்த குரூப். எனவே பெப்சி தலைவர் இந்தியா நூயி இதுபோன்ற சிக்கலான பணிகளை மேற்கொள்வது கஷ்டம் என்கிறார்கள். அதுவே வோடபோனில் தலைவராக இருந்த அருண் சரினுக்கும் பொருந்தும். எனவே டாடா குழுமத்திற்கு உள்ளேயே இருந்து அதன் நெளிவு சுளிவுகளை அறிந்த ஒருவரே அடுத்த தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாம்.