மெர்சல் படத்திற்கு எதிராக கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் ஏன்? பின்னணியில் திடுக் அரசியல்
Recommended Video
பெங்களூர்: மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்துவதன் பின்னணியில் கர்நாடக சட்சபை தேர்தல் உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அட்லி இயக்கத்தில், விஜய், நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மெர்சல். தமிழகத்தை போலவே பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடக திரையரங்குகளிலும் படம் ரிலீசாகியுள்ளது.
இந்த நிலையில், பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியிலுள்ள ஒரு தியேட்டரின் வெளியே கன்னட மொழி பேசிய ஒருவர் விஜய் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இதுகுறித்த வீடியோ வைரலானது.
பாதுகாப்புடன் படம்
இதையடுத்து, கன்னட அமைப்பினர் ஒன்று திரண்டு வந்து, தியேட்டருக்கு வெளியே போராட்டம் நடத்தினர். விஜய் கட்-அவுட்டுகளை அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் பெங்களூரிலுள்ள பல திரையரங்குகளில் திரைப்படம் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையை, எதிர்க்கட்சி சார்பு கன்னட ஊடகங்கள் சில ஊதி பெரிதாக்கி வருகின்றன.
அய்யயோ அடிக்கிறார்களே
உதாரணத்திற்கு, ஒரு கன்னட செய்தி டிவி சேனல் செய்தி வாசிப்பாளர் (!) செய்தியை இப்படி படிக்கிறார், "பெங்களூரில் தமிழர்கள் ரவுடித்தனம். நடு ரோட்டில் கன்னடரை போட்டு அடித்தனர். யாரோ விஜயாம். பட நடிகராம். அந்த விஜய் கட்-அவுட்டை நிமிர்ந்து பார்த்ததால், எங்கள் பாஸ்ஸை எப்படி நிமிர்ந்து பார்ப்பது என்று கூறி, அவரது ரசிகர்கள் கன்னடரை அடித்துள்ளனர். உங்கள் பாஸ்ஸை வீட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்" இப்படி செய்தி வாசிக்கிறார் (?) அந்த செய்தி வாசிப்பாளர். இந்த காரணம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தாலும், அதைேய உச்சஸ்தாபியில் செய்தியாக வாசிக்கிறார் அவர். இதுதான் பல சேனல்களின் நிலை.
மீடியாக்களின் விஷமம்
செய்தி ஒளிபரப்பாகும்போது, ஒரு நபரை சிலர் தியேட்டர் அருகே அடித்து விரட்டுவது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன. ஆனால், அடிப்பவரும் கன்னடத்தில் பேசுவதை போலதான் ஒலி கேட்கிறது. ஆனால், பெங்களூரில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது போன்ற தோரணையை கன்னட மீடியாக்கள் ஏற்படுத்துகின்றன. அதிலும், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் போன்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஊடகங்கள் இதுபோன்ற தீவிர பிரசாரத்தை கையில் எடுத்துள்ளன.
பெங்களூர் மேயரான தமிழர்
இதன் பின்னணியில் சினிமா போட்டி சதி என்பதை தாண்டி, அரசியல் நோக்கமும் உள்ளது என்கிறார்கள் கர்நாடகாவிலுள்ள அரசியல் நோக்கர்கள். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பெங்களூரிலுள்ள 28 சட்டசபை தொகுதிகளில் பெரும்பாலானவற்றை வென்றுவிட்டால் அது ஆட்சியமைக்க பெரும் உதவியாக இருக்கும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. இதனால்தான் தமிழரான, கவுன்சிலர் சம்பத்ராஜை சமீபத்தில் மேயர் பதவிக்கு காங்கிரஸ் முன்மொழிந்தது. அவர் வெற்றி பெற்று மேயரானார். அப்போதே, தமிழர் கையில் பெங்களூர் மாநகராட்சியை காங்கிரஸ் ஒப்படைத்துவிட்டதாக கன்னட மீடியாக்கள் சித்தராமையாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்தன.
தமிழர்கள் வாக்குகளின் முக்கியத்துவம்
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறந்து எடியூரப்பா, தமிழர்களின் ஆதர்ஷ நாயகனாக உருவானதால் அடுத்த தேர்தலில் பெங்களூர் மாநகராட்சியை முதல் முறையாக பாஜக கைப்பற்றியது. காங்கிரசுக்குதான் வழக்கமாக தமிழர்கள் வாக்களித்து வந்த டிரெண்ட்டை எடியூரப்பா மாற்றிக்காட்டினார். காரணம், கன்னடர்கள் எதிர்ப்பை மீறி, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியுடன் அவர் திறந்து வைத்த திருவள்ளுவர் சிலை. எனவே பெங்களூரிலுள்ள தமிழர்கள் வாக்குகளை பெற காங்கிரஸ் இப்போது கடும் பிரயத்தனப்பட்டு வருகிறது. தமிழர்களின் தோழனாக காண்பிக்க சித்தராமையா, சிரத்தை எடுத்து வருகிறார். சமீபத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளுக்கு டிவிட்டரில் சித்தராமையா வாழ்த்து தெரிவித்ததும், இதன் ஒரு அங்கம் என்று கூறப்படுகிறது.
தர்ம சங்கடம்
தமிழர்கள் வாக்குகளை பெற சித்தராமையா முயற்சி செய்வதை தடுக்க வேண்டுமானால், கன்னடர்கள்-தமிழர்கள் இடையே மோதல் இருக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சி பிரமுகர்கள் விரும்புகிறார்கள். பருவ மழை சிறப்பாக பெய்துள்ளதால் இவ்வாண்டு காவிரி பங்கீட்டில் பிரச்சினை எழாது. எனவே மெர்சல் போன்ற திரைப்படங்களை முன்வைத்து சண்டை மூட்டப்படுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தமிழர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா, கன்னட அமைப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதா என்ற தர்ம சங்கடத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் சித்தராமையா. ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகள் பலவற்றை பார்த்துள்ள அவர், இருதரப்புக்கும் பாதிப்பின்றி உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்கிறார்கள், நம்மிடம் பேசிய காங்கிரஸ் பிரமுகர்கள்.