ரோஹித் மெமுலா பற்றி அமைச்சர் ஸ்மிருதி அனல் பறக்க தெரிவித்த தகவல் பொய்யா?
ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா இறந்து மறுநாள் காலை 6.30 மணி வரை அவரது உடல் அருகே செல்ல மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த தகவல் தவறு என்று செய்தி வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அரசியலாக்குகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் ராகுல் மெமுலாவின் உடலை அரசியல் ஆயுதமாக பார்க்கிறார் என்றார்.
டாக்டர்கள்
ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட பிறகு மறுநாள் காலை 6.30 மணி வரை அவரது உடல் அருகே மருத்துவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவரை காப்பாற்றவிடாமல் தடுத்துள்ளனர். வெமுலாவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர் என்று ஸ்மிருதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரோஹித்
ரோஹித் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் இருக்கும் அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கியது மாலை 6.30 மணி முதல் 7 மணி இடையே கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை
ரோஹித் தனது நண்பர் உமா மகேஷ்வரின் அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கியதை பார்த்த வாட்ச்மேன் உடனே வளாகத்தில் இருந்த டாக்டர் ராஜ்ஸ்ரீக்கு தகவல் அளித்தார்.
மரணம்
ஜனவரி 17ம் தேதி இரவு 7.20 மணிக்கு எனக்கு ரோஹித் பற்றி போன் வந்தது. உடனே நான் விடுதிக்கு சென்று அவரை பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டதாக 10 நிமிடத்தில் தெரிவித்தேன். இது குறித்து துணை வேந்தருக்கும் உடனே தெரிவிக்கப்பட்டது. ரோஹித்தை காப்பாற்ற முடியுமா என்று அவர் என்னிடம் கேட்டார். இரவு 3 மணி வரை நான் அங்கு தான் இருந்தேன் என்று டாக்டர் ராஜ்ஸ்ரீ பல்கலைக்கழக சுகாதார பதிவேட்டில் எழுதி வைத்துள்ளார்.
7.30 மணி
ரோஹித் இறந்துவிட்டதாக இரவு 7.30 மணிக்கு ராஜ்ஸ்ரீ அறிவித்துள்ளார். ரோஹித்தை அவர் பரிசோதனை செய்தபோது அங்கு மாணவர்களும், போலீசாரும் இருந்துள்ளனர்.
பொய்யா?
ரோஹித் மெமுலாவை காப்பாற்ற முயற்சி நடக்கவில்லை என்றும், அவரின் உடல் அருகே செல்ல டாக்டர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஸ்மிருதி தெரிவித்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.