வரதட்சணைக் கொடுமை... விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர் கணவர்!
கொல்கத்தா : வரதட்சணைக் கொடுமை செய்வதாக போலீசில் மனைவி புகார் அளித்ததால், மேற்கு வங்கத்தில் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வருவது வழக்கம். ஆனால், இவற்றில் இருந்து வேறுபட்டு வரதட்சணைக் கொடுமை காரணமாக மேற்கு வங்கத்தில் ஆண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சுப்தீப் (33). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் கணவர் வீட்டார் தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்துவதாக சுப்தீப்பின் மனைவி போலீசில் புகார் அளித்தார். மனைவியின் புகார் தொடர்பாக தகவலறிந்த சுப்தீப், போலீசாரின் விசாரணைக்குப் பயந்து இன்று காலை தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சுப்தீப்பின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்..