பிரபல டிவி செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் தலைமறைவு.. மீண்டும் ஏமாற்றம்.. போலீஸ் அறிவிப்பு
பிரபல செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் தலைமறைவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்
ராய்ப்பூர்:காங்கிரஸ் எம்பி. ராகுல் குறித்த வீடியோவை, தவறாக திரித்தும், மோசடியாகவும் பயன்படுத்திய வழக்கில், பிரபல செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் தலைமறைவாக உள்ளதாக சத்தீஸ்கர் போலீசார் அறிவித்துள்ளனர்.
கேரளாவில் காங்கிரஸ் எம்பி ராகுலின் வயநாடு தொகுதி அலுவலகம், சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டது... இந்த நிகழ்வு குறித்து பேசிய ராகுல், "அவர்கள் குழந்தைகள், அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, இஸ்லாமியர்கள் மதம் குறித்து பேசி, சர்ச்சையில் சிக்கி, பெரும் கண்டனத்துக்கு ஆளான நுாபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், தலை துண்டிக்கப்பட்ட டெய்லர் கன்னையா லால் தொடர்பான நிகழ்ச்சியை தனியார் டிவி சேனல் ஒன்று ஒளிபரப்பியது.
ரோஹித் ரஞ்சன்
இந்த சேனலில் பணிபுரிபவர் பிரபல செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன்.. உத்தரப்பிரதேசம் காஸியாபாத் பகுதியில் இவர் வசித்து வருகிறார்.. இவர்தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம்கூட, தொடர்பில்லாத வயநாடு விவகாரம் குறித்து ராகுல் கூறியது இணைக்கப்பட்டிருந்தது... அதில், ராகுல் காந்தி உதய்பூர் தையல்காரர் கன்னையா லாலின் கொலையாளிகள் குறித்து கூறியதாக சொன்ன வார்த்தைகள் சர்ச்சையானது, அதாவது, ராகுல் சொல்லாததை இவர் சொன்னதாக பயன்படுத்தியது சர்ச்சையானது.
வெறுப்புணர்வு
இதையடுத்து, அந்த வீடியோவை பாஜக தலைவர்களும் பதிவு செய்து ராகுலை கடுமையாக விமர்சித்துவந்தனர். பிறகு, செய்தி தொகுப்பாளர், "இந்த செய்தி பொய்யான தகவல். தெரியாமல் தவறு நிகழ்ந்துவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்... ஆனாலும், இதையடுத்து இரு தரப்பினர் இடையே வெறுப்புணர்வை துாண்டியதாக காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், பாஜக ஆளும் உபி ஆகிய மாநிலங்களில், அந்த ரோஹித் ரஞ்சன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
டிவி தொகுப்பாளர்
மேலும், ராய்பூரில், காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், "டிவி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் மக்களின் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் தவறான வீடியோவை பதிவு செய்துள்ளார்.. அதனால், அவரை கைது செய்ய வேண்டும்" என்று போலீசில் புகார் அளித்தார்... அதைத்தொடர்ந்து, ரோஹித்துக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது பின்னர், நொய்டா செக்டார்-20 போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தலைமறைவு
அங்கேயே குற்றம் உறுதி செய்யப்பட்டு, எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டு, அன்று இரவு ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில் ரோஹித் ரஞ்சன் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.. சத்தீஸ்கர் எஸ்பி உதயன் பெஹர் இதுகுறித்து சொல்லும்போது, "2 நாட்களுக்கு முன்பு, நாங்கள் ரோஹித் ரஞ்சனை கைது செய்ய, உபி காசியாபாத்துக்கு போனோம்.. அவர் வீடு பூட்டியிருந்தது... அவரை நொய்டா போலீசார் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
ஜாமீன்?
இதையடுத்து, நொய்டா போலீஸ் நிலையம் சென்று கேட்டபோது, அவர்கள் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை... ஆனால் சில மணி நேரத்தில் ரோஹித் ரஞ்சனை கைது செய்து, ஜாமீனில் விடுவித்ததாக போலீஸ் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ரோஹித் ரஞ்சனை கைது செய்ய, மறுநாள் அவர் வீட்டிற்கு சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்தது. அதனால் ரோஹித் ரஞ்சன் தலைமறைவாக உள்ளதாக அறிவித்துள்ளோம்" என்றார்.