‘கமிஷன்’ டாக்டர்களால் பரிசோதனைக்கூட எலிகளாகும் நோயாளிகள்... விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரகசிய படப்பிடிப்பில், பரிசோதனைக் கூடங்களில் மருத்துவர்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு நோயாளிகளை தேவையில்லாத பரிசோதனைகளுக்கு ஆளாக்குவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
‘ஸ்டிங் ஆபரேஷன்' எனப்படும் ரகசிய படப்பிடிப்பு வாயிலாக அவ்வப்போது ஊடகங்கள் பல அக்கிரமங்களின் முகமூடிகளை கிழித்தெறிகின்றன. அந்தவகையில், தற்போது நோயாளிகள் கடவுளாகப் பாவிக்கும் மருத்துவர்களின் பண ஆசை அம்பலப் படுத்தப்பட்டுள்ளது.
சேவைத் துறைகளில் ஒன்று தான் மருத்துவமும். எனவே, தான் மருத்துவர்கள் நிச்சயமாக நமக்கு தீமை செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், அவர்கள் தரும் மருந்துக்களை கண்களை மூடிக் கொண்டு நோயாளிகள் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்கள் கூறும் பரிசோதனைகளை செலவைப் பொருட்படுத்தாமல் செய்கின்றனர்.
ஆனால், சில மருத்துவர்களோ பண ஆசையால் நோயாளிகளை எவ்வாறு வீண் அலைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்பது இப்போது ஆதாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.
ஸ்டிங் ஆபரேஷன்...
நியூஸ் நேஷன் என்ற தனியார் செய்தி நிறுவனம் சமீபத்தில் ரகசிய படப்பிடிப்பு ஒன்றை நடத்தியது. அதில் மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனைக்கூடங்களுடன் கூட்டு சேர்ந்து நோயாளிகளிடம் எப்படியெல்லாம் பணத்தைக் கறக்கிறார்கள், தேவையில்லாத பரிசோதனைகளையெல்லாம் செய்துவருமாறு நிர்பந்திக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அம்பலம்....
மேலும், இத்தகைய பரிசோதனைக்கூடங்களில் இருந்து மருத்துவர்கள் 30-50 சதவீத கமிஷன் பெறுகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. இலை மறை காயாக இருந்த இந்தப் பிரச்சினை ஊடகம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அறிக்கை...
இது தொடர்பாக அதிரடி விசாரணைக்கு உத்தரவிட்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தன் நேற்று நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து பேசினார்.
எழுத்து வடிவம்...
அப்போது அவர் கூறியதாவது:-
டி.வி. நிகழ்ச்சி மூலம் அம்பலத்துக்கு வந்துள்ள இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பான டி.வி.டி., மற்றும் அதன் எழுத்து வடிவத்தை சமர்ப்பிக்குமாறு நியூஸ் நேஷன் சேனல் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவ கவுன்சில்...
மேலும், எங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிற தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சில், தனது நெறிமுறை குழுவின் கூட்டத்தை கூட்டி, நடவடிக்கை குறிப்புகளை இணைய தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடிதம்...
கமிஷன் (லஞ்சம்) பெறுகிற நடைமுறை, இந்திய மருத்துவ கவுன்சிலின் 2002-ம் ஆண்டு நெறிமுறைகளை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்டி, இந்திய மருத்துவ கவுன்சில் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
கமிஷன்...
சில டாக்டர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், அல்டிரா ஸ்கேன், வழக்கமான நோய் இயல் பரிசோதனைகள் போன்றவற்றில் 30-50 சதவீத கமிஷன் பெறுவது தொடர்பாக பேசுவதை மறைமுகமாக படம் பிடித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்...
டெல்லியின் பழமையான பரிசோதனைக்கூடம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பல பரிசோதனைக்கூடங்கள் இதில் தொடர்புடையவர்கள் என காட்டப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம்...
எல்லோரையும் பொத்தாம்பொதுவாக ஒரே தராசில் வைத்து பார்த்து குறை கூறுவது சரி அல்ல. இருப்பினும் நெறிமுறை மீறிய இத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை உன்னதமான மருத்துவத் தொழில் செய்வதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.
யோசனைக் குழு...
மேலும், மருத்துவ தொழில் தொடர்பாக வெளிப்படையான தன்மையை கொண்டு வந்து அறிமுகப்படுத்த தேவையான யோசனைகளை கூறுவதற்கு பிரசித்தி பெற்ற டாக்டர்கள், நுகர்வோர் சட்ட வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றை எங்கள் அமைச்சகம் அமைக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.