என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா... டாக்டர்களைப் பார்த்து குமுறிய குவாலியர் நோயாளிகள்!
குவாலியர்: மத்தியப் பிரதேசத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் குறிப்பிட்ட மருத்துவமனை டாக்டர்கள் அனைவரும் ஊர் சுற்ற சென்ற சம்பவம் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
குவாலியரைச் சேர்ந்த ஜெய் ரோக் மருத்துவமனை டாக்டர்கள்தான் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுள்ளனர்.
இந்த மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள், செவ்வாய்க்கிழமையன்று மொத்தமாக மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால் சிகிச்சை பெற வந்த புற நோயாளிகள் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அக நோயாளிகள் என யாருக்கும் சிகிச்சை கிடைக்கவில்லை. மருந்து மாத்திரை கொடுக்க ஆள் யாரும் இல்லாததால், நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
இப்படி, ஒரு சேர டாக்டர்கள் அனைவரும் எங்கே போனார்கள் என நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் விசாரித்தால், டாக்டர்கள் அனைவரும் ஜாலியாக வெளியே ஊர் சுற்றப் போயிருந்தது தெரிய வந்தது. இதைக் கேள்விப்பட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்டர்கள் வராததால் மருத்துவமனையே ஸ்தம்பித்துப் போனது. யாருக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குவாலியரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாம்.