மமதா பேச்சில் திருப்தி.. ஒரு வார கால டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது!
ஒருவார காலமாக மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
கொல்கத்தா: ஒரு பக்கம் போராட்டம் நடத்தி கொண்டும், மறு பக்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சையை மேற்கொண்டும் வந்த போராட்டம் வாபஸ் பெற்றுவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் என்ஆர்எஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
டாக்டர்களின் அலட்சியத்தால்தான் நோயாளி இறந்தார் என்று கூறி உறவினர்கள் ஒரு டாக்டரை அடித்து தாக்கினர். அந்த டாக்டர் ஒரு பயிற்சி டாக்டர் என்று சொல்லப்படுகிறது.
போராட்டம்
இதை கண்டித்துதான், கொல்கத்தாவில் கடந்த 11-ஆம் தேதி முதல் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதே சமயத்தில் தலையில் ஹெல்மட் மாட்டிக் கொண்டும், பேண்டேஜ் அணிந்து கொண்டும் வேலை பார்த்தனர்.
மருத்துவ சேவை
கொல்கத்தா டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பும், "நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 24 மணி நேர சேவை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்" என்று அறிவித்தது. அதன்படியே நம் மாநிலத்திலும் இன்று காலை போராட்டம் தொடங்கியது.
கருப்பு பேட்ஜ்
ஒரேடியாக போராட்டத்தில் இறங்கிவிட்டால், நோயாளிகள் நிலைமை என்னாவது என்பதை உணர்ந்த நம் டாக்டர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்தபடி இன்று நாள் முழுவதும் வேலை செய்தனர். எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஹெல்மட் போட்டுக் கொண்டு வேலை பார்த்தனர்.
மமதா பானர்ஜி
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு டாக்டர்களுக்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அதன்படி டாக்டர்கள் சார்பில் 31 பேரும், மம்தா பானர்ஜி மற்றும் தலைமைச் செயலாளர், மாநில காவல்துறை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து.
குறைதீர் மையம்
அப்போது, டாக்டர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் உரிய பாதுகாப்பு தரப்படும் என்று மம்தா உறுதி சொன்னார். ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும், போலீஸ் பாதுகாப்புப் போடப்படும் என்றும், டாக்டர்களின் பிரச்சனைகளை போக்க குறைதீர் மையம் புதிதாக அமைக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.
அறிவிப்பு
மேலும், இதுவரை ஸ்டிரைக்கில் ஈடுபட்ட எந்த டாக்டர்கள் மீதும் எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று சொன்ன மம்தா, ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். தங்களது கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக் கொண்டதால், நடத்தி வரும் ஸ்டிரைக்கை வாபஸ் பெற போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.