அல் பக்தாதி பலி.... முடிவுக்கு வருகிறது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சகாப்தம்?
டெல்லி: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல் பக்தாதி பலியாகிவிட்டதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் சகாப்தம் முடிவுக்கு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈராக், சிரியாவில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனம் செய்தது ஐ.எஸ். இயக்கம். இந்த இஸ்லாமிய தேசத்தின் தலைவராக அல் பக்தாதி அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பருக்குப் பின்னர் அல்பக்தாதி நிலை குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.
இந்த நிலையில் விமானத் தாக்குதல் ஒன்றில் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இதுவரை ஐ.எஸ். இயக்கம் இதை மறுக்கவில்லை.
அமெரிக்காவின் தாக்குதல்
சிரியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில், 2014-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2016-ம் ஆண்டு மே வரையில் சிரியாவில் மட்டும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் தாக்குதலில் 4,885 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; இவர்களில் 4450 பேர் ஐஎஸ் தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தாக்குதல்
அதேபோல் 2015-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2016 மே வரை ரஷ்யாவின் விமானத் தாக்குதலில் 6,340 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; இவர்களில் 2,270 பேர் ஐஎஸ் தீவிரவாதிகள்; 1,971 பேர் அல்கொய்தாவின் அல் நுஸ்ரா முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்கிறது.
கட்டுப்பாட்டை இழந்த ஐ.எஸ்.
ஈராக்கில் ஐஎஸ் இயக்கம் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களில் 45% இழந்துள்ளது; சிரியாவில் 20% இடங்களை இழந்திருக்கிறது.
சகாப்தம் முடிவடைகிறது
இந்த நிலையில் அல் பக்தாதி பலியாகி இருப்பது ஐஎஸ் இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அமெரிக்கா கூட்டுப் படைகள் தொடர்ச்சியாக ஐஎஸ் இயக்கத்தின் ஷரியா நீதிமன்றங்கள், எண்ணெய் வயல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அல் பக்தாதி தலைமை இல்லாததால் ஐ.எஸ். இயக்கத்தின் சகாப்தம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.