இஸ்லாமாபாத்தில் ஐ.நா.வுக்கான பாக். பிரதிநிதி வீட்டில்தான் தாவூத் பதுங்கல்?
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி மாலீகா லோதி வீட்டில்தான் பதுங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாவூத் இப்ராகிம் தொடர்பான இந்தியாவின் ஆவணங்களில், மெயின் மர்காலா சாலை எஃப்-6/2, எண்: 7, இஸ்லாமாபாத் என்பதுதான் தாவூத் இப்ராகிமின் முகவரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முகவரியானது தாவூத் இப்ராகிமின் வீட்டு முகவரியா? அல்லது ஐ.நா. சபைக்கான பாகிஸ்தானின் நிரந்த பிரதிநிதி மலீகா லோதியின் வீட்டு முகவரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் ஊடகங்களோ இது லோதியின் வீட்டு முகவரிதான் என்று உறுதியாக எழுதி வருகின்றன. மேலும் அந்த முகவரியில் உள்ள பாதுகாவலரிடம், தாவூத்தின் வீடு இதுதானா என்ற கேள்வி கேட்கப்பட்டதாகவும், அப்படி ஒரு பெயரையே தாம் இப்போதுதான் கேட்கிறேன், இது மலீகா லோதியின் வீடு; இந்த வீட்டை அவரது செயலாளர்தான் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளதாகவும் பாகிஸ்தானின் தி நேசன் ஏடு பதிவு செய்துள்ளது.
மலீகா லோதிதான் காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் எழுப்பியவர்; காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண ஐ.நா. மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசிவருகிறவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அதிகாரிகள், 1993ஆம் ஆண்டு முதலே தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்றே கூறி வருகிறது பாகிஸ்தான். எங்களுக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின்படியே அந்த முகவரியை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம் என்கின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரை சர்வதேச விசாரணை அமைப்புகளை முட்டாளாக்கிக் கொண்டு தாவூத்தை பாதுகாப்பதில் குறியாக இருக்கிறது.
தாவூத் பதுங்கியிருக்கும் இடம் பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு மிக நன்றாகவே தெரியும்... கராச்சி, இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தானுக்கு தாவூத் இடம்பெயர்ந்தார் என்று ஐ.எஸ்.ஐ.தான் தகவல்களை பரப்பியது என்கின்றனர் வெளியுறவுத் துறை அதிகாரிகள்.