இந்தியாவுக்கு புல்லட் ரயில் கண்டிப்பாக தேவையா?
டெல்லி: இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. தற்போதைய ரயில் ரயில் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, துரித வேக ரயில் சேவைகளை அமைப்பதும் கட்டாயமாகிறது.
பாதுகாப்பு, வேகம் மற்றும் மக்களுக்கான சேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மும்பை-அகமதாபாத் ரயில் இடையே அதிவேக ரயில் சேவை துவக்கப்பட உள்ளது. புல்லட் ரயில் என்பது இந்த திட்டத்தின் பிரபல பெயராக உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிததமர் சின்சோ அபே ஆகியோரும் இணைந்து சமீபத்தில் புல்லட் ரயில் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.
வரலாறு
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொதுவாக புதிய தொழில்நுட்பத்தை மக்கள் ஏற்பதில் தாமதம் இருக்கலாம். ஆனால் சரித்திரத்தை எடுத்து பார்த்தால், அவ்வாறான மாற்றங்கள்தான் நாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை தருகிறது.
வழக்கம்
1968ல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டபோது, ரயில்வே வாரிய சேர்மன் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற நிலைதான் இந்தியாவை பின்னுக்கு இழுப்பவை. இப்போது ராஜ்தானி எக்ஸ்பிரசில் பயணிப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக உள்ளது.
பணம் சேமிப்பு
அதேபோல புல்லட் ரயில் திட்டமும் வருங்காலத்தில் ஒவ்வொரு பயணியின் விருப்பமானதாக மாறும். புல்லட் ரயில் திட்டத்திற்கு 88,000 கோடியை ஜப்பான் அரசு இந்திய ரயில்வேக்கு கடனாக வழங்கியுள்ளது. இதற்கான வட்டி விகிதம் வெறும் 0.1% ஆகும். 50 ஆண்டுகள் திருப்பிச் செலுத்த அவகாசம் உள்ளது. இது இந்த திட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொருளாதார உதவியாகும். இதனால் நாட்டின் கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
பணிச்சூழல்
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அமைய உள்ள புல்லட் ரயில் நிலையங்களை ஒட்டி, பொருளாதார மண்டலங்கள் அமையும். இதனால் அப்பகுதியில் தொழில் வளர்ச்சி மேம்படும். கட்டுமான மட்டத்திலேயே சுமார் 20000 பேருக்கு இந்த திட்டத்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.