புலியுடன் போராடி தன்னுயிரை கொடுத்து எஜமானரின் உயிரை காத்த நாய்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நாய் ஒன்று புலியுடன் போராடி தன்னுயிரை கொடுத்து தன்னை வளர்த்த விவசாயியின் உயிரை காப்பாற்றியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் குதார் நகர் அருகே உள்ள பார்பத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான குருதேவ் சிங். அவர் ஜாக்கி என்ற 4 வயது நாயை வளர்த்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு குருதேவ் தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தென் கேரி காட்டில் இருந்து புலி ஒன்று அங்கு வந்தது. குருதேவ் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நாய் ஜாக்கி கண்விழித்து பார்த்தபோது புலி தனது எஜமானை தாக்க வந்தது.
இதையடுத்து ஜாக்கி குருதேவை எழுப்பிவிட்டு புலியுடன் போராடியது. கண்விழித்த குருதேவ் உதவி கேட்டு அலறினார். அதற்குள் புலி ஜாக்கியை படுகாயப்படுத்தி இழுத்துக் கொண்டு ஓடியது.
குருதேவ் ஜாக்கியை பல இடங்களில் தேடிய போது காட்டுப்பகுதியில் அதன் உடல் கிடந்ததை பார்த்து கண்ணீர் சிந்தினார்.
இது குறித்து குருதேவ் கூறுகையில்,
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு என் 2 குழந்தைகள் ஜாக்கியை குட்டியாக தூக்கி வந்தனர். அது தினமும் என் குழந்தைகளுடன் பள்ளிக்கு செல்லும். தன்னுயிரை கொடுத்து தனது நன்றிக் கடனை காட்டிவிட்டது ஜாக்கி என்றார்.
ஜாக்கி இறந்ததை நினைத்து குருதேவ் ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லையாம்.