ஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில் இருந்து குதித்த நாய் தற்கொலை
கான்பூர்: தன்னை வளர்த்த எஜமானி இறந்து போனதை எண்ணி தாங்க முடியாத வேதனையில் இருந்த வளர்ப்பு நாய், அதனை வளர்த்த பெண் மருத்துவரின் உடல் வீட்டிற்கு வந்த போது, நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் கான்பூர் நகரில் நடந்துள்ளது.
டாக்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரின் பார்ரா -2 பகுதியில் உள்ள மாலிக்புரத்தில் வசித்து வந்தார். இவர் அரசு மருத்துவமனையின் சுகாதார இயக்குனர் ஆவார்.
டாக்டர் அனிதா கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் பிறந்த உடனேயே கைவிடப்பட்டு , பரிதாப நிலையில் ஒரு குட்டி நாயை உர்சுலா ஹார்ஸ்மன் மருத்துவமனைக்கு அருகே கண்டெடுத்தார். அந்த நாயின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதை குணப்படுத்தி ஜெயா என்று பெயரிட்டு அதை தன் வீட்டில் வைத்து பாசமாக வளர்த்து வந்தார்.
நாய் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த டாக்டர் அனிதா அதை அதிக அக்கறையுடன் பார்த்து வந்தார். மிகவும் செல்லமாக வளர்ந்த நாய் தனது எஜமானியான அனிதா மீது கொள்ளை பாசம் வைத்திருந்தது. டாக்டர் அனிதாவின் வீட்டில் ஒரு உறுப்பினர் போல் மாறியது ஜெயா நாய்.
நீதிபதி குன்ஹாவை விமர்சித்த வேலூர் மாஜி மேயர் கார்த்தியாயினிக்கு பாஜக மாநில செயலாளர் பதவி!
இந்நிலையில் டாக்டர் அனிதா சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த புதன்கிழமை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அனிதாவின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வருவதை பார்த்து மிகுந்த வேதனை அடைந்த நாய், திடீரென நான்காவது மாடியில் இருந்து தரையில் குதித்து தற்கொலைக்கு முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதாவின் மகன் தேஜாஸ், மருத்துவமனைக்கு நாயை கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர் நாய் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
தன்னை ஒரு தாயை போல் 12 வருடம் வளர்த்த எஜமானி இறந்த துக்கம் தாங்காமல் நாய் இறந்த சம்பவம் கான்பூர் முழுவதும் பரவியதால் அந்த வீட்டில் மக்கள் கூடிவிட்டார்கள். இதனிடையே டாக்டர் அனிதாவை அடக்கம் செய்த பிறகு அவரது குடும்பத்தினர் நாயை தங்கள் வீட்டின் அருகே அடக்கம் செய்தனர்.