‘தொடரி’ தனுஷ் மாதிரி கேஷூவலாக ரயில் மீது ஓடி விளையாடிய நாய்... 1100 கிமீ பயணித்த ஆச்சர்யம்!
சுமார் 1100 கிமீ ரயில் மேற்கூரையில் பயணித்து நாய் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத் ரயிலின் மேற்கூரையில் ஓடி விளையாடியவாறு, 1100 கிமீ தூரம் நாய் ஒன்று பயணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் சுற்றித் திரியும் நாய் ஒன்று, திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது விளையாட்டுத்தனமாக ஏறியுள்ளது. ஆனால், இதனை ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை.
ரயில் வேகமாகச் செல்லத் தொடங்கியும் பயப்படாத அந்நாய், உற்சாகமாக ரயிலின் மீது ஓடி விளையாடியுள்ளது. ரயில் வேகமாகச் செல்லும் போது, இரு பெட்டிகளுக்கு இடையேயுள்ள பகுதியில் லாவகமாக அமர்ந்து கொண்ட நாய், பின்னர் ரயிலின் மேற்கூரையில் இங்கும் அங்கும் ஓடியுள்ளது.
சி.ஆர்.பி.எப். வீரர்கள்:
இதனை ரயிலின் ஒரு பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் பள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுராஜ், வினோஸ் ஆகியோர் கவனித்துள்ளனர். ரயிலின் மேற்கூரையில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த அவர்கள், அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது இறங்கி மேலே பார்த்து அதிர்ந்துள்ளனர்.
மீண்டும் புறப்பட்ட ரயில்:
இருவரும் சேர்ந்து அந்நாயை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களை கடிப்பது போல் ஆக்சன் செய்து அந்த நாய் மிரட்டியுள்ளது. இதற்குள் ரயில் மீண்டும் புறப்பட்டு விடவே, அவர்கள் அடுத்த ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு மீண்டும் ரயில் பெட்டிக்குள் ஏறிக் கொண்டனர்.
தொடர் தோல்வி:
அடுத்த ரயில் நிலையம் வந்தபோது அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் நாயை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களாலும் நாயை விரட்ட முடியவில்லை. இதனால் அடுத்து வந்த ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நாயை விரட்டும் முயற்சி தொடர்ந்தது. ஆனால், நாய் அசரவேயில்லை. அனைவரையும் கடிப்பது போன்று பாய்ந்து விரட்டியது.
உயரழுத்த மின்கம்பிகள்:
இப்படியாக ஏறக்குறைய 20 மணி நேரம் ரயிலின் மேற்கூரையிலேயே அந்த நாய் பயணம் செய்தது. பின்னர் மறுநாள் காலை 10.30 மணியளவில் அந்த ரயில் பாலக்காடு ஒலவக்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து கேரளா செல்லும் பாதையில் மிக உயரழுத்த மின் கம்பிகள் இருப்பதால் இனிமேல் மேற்கூரையில் பயணம் செய்தால் நாய்க்கு ஆபத்து ஏற்பட்டு பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
மீண்டும் புறப்பட்டது:
இதையடுத்து ஒலவக்கோடு ரயில் நிலையத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் வினோஸ் லாவகமாக மேற்கூரையில் இருந்த நாயின் காலை பிடித்து கீழே தூக்கி வீசினார். இதில் லேசான காயமடைந்த நாய், அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்தது. நாய் கீழே இறங்கியதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரம் தாமதமாக அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
பயணிகள் ஆச்சர்யம்:
மொத்தம் 1100 கிலோ மீட்டர் தூரத்தை ரயில் பெட்டிகளின் மேற்கூரையில் பயணம் செய்து கடந்துள்ளது அந்நாய். இது அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.