பக்தருடன் 600 கி.மீ தூரம் சபரிமலைக்கு 'பாத யாத்திரை' சென்ற நாய்! கேரளாவில் நெகிழ்ச்சி
கேரளாவைச் சேர்ந்த நாய் ஒன்று சபரிமலைக்கு நடந்து சென்ற பக்தருடன் தானும் யாத்திரை சென்றுள்ளது. ஏறத்தாழ 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த நாய் நடந்து சென்றுள்ளது.
கொச்சின் : கேரளாவைச் சேர்ந்த நவீன் என்ற பக்தர் சபரிமலைக்கு பாத யாத்திரை சென்றுள்ளார். அவரை வழியில் பார்த்த நாய் ஒன்று திடீரென அவருடன் சேர்ந்து 600 கிலோ மீட்டர் சென்று தானும் பாத யார்த்திரையை முடித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்தவர் நவீன். அம்மாநில மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் நவீன், தீவிர ஐயப்ப பக்தர் ஆவர். இவர் கடந்த மாதம் சபரிமலைக்கு பாதயாத்திரை சென்றார்.
அவர் 80 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்த நிலையில் வழியில் அவரை ஒரு பெண் நாய் பார்த்துள்ளது. பின்னர் நவீனை பின்தொடர்ந்து செல்ல தொடங்கியுள்ளது அந்த நாய்.
விரட்டியும் பின்தொடர்ந்த நாய்
இதனை கவனித்த நவீன், அந்த நாயை பலமுறை விரட்டியுள்ளார். ஆனால் செல்ல மறுத்த நாய் நவீனையே பின்தொடர்ந்து வந்துள்ளது.
யாத்திரையில் சேர்த்துக்கொண்ட நவீன்
நவீனுக்குப் பின் 20 மீட்டர் தொலைவில் சென்ற நாய் இரவு நேரத்திலும் நவீனை விட்டு விலகாமல், அவருக்கு பாதுகாப்பாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் நாயை விரட்ட மனமில்லாமல் தன்னுடைய பாதயாத்திரை பயணத்தில் அந்த நாயை சேர்த்துக் கொண்டார்.
600 கி.மீ நடந்த நாய்
ஏறத்தாழ 600 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற அந்த நாய் நவீனுடன் தனது பாத யாத்திரையை முடித்துள்ளது. நாயுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்ட நவீன் அதனை அங்கேயே விட்டு வர மனமில்லாமல், கேரள போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தன்னுடன் பேருந்தில் கடந்த 23ஆம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
மாலு என பெயர்சூட்டல்
அந்த நாய்க்கு மாலு என பெயர் சூட்டியுள்ளார் நவீன். மல்லிகாபுரம் என்ற இடத்தில் அந்த நாயை சந்தித்ததால் அதற்கு சுருக்கமாக மாலு என பெயர் வைத்துள்ளதாகவும் நவீன் கூறியுள்ளார்
குடும்பத்தில் ஒருவரான நாய்
தற்போது அந்த நாய் நவீன் குடும்பத்தில் ஒருவராக உள்ளது. மனிதர்களே சரியான நேரத்தில் கழட்டிவிட்டு கைகழுவும் நிலையில் இடையில் சந்தித்த நாய், இரவும் பகலும் பாதுகாப்பாய் இருந்ததோடு 600 கிலோ மீட்டர் நடந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.