சம்பளப் பணத்தைக் கேட்டதால் ஆத்திரம்.. வேலைக்கார சிறுமி படுகொலை... டெல்லியில் பயங்கரம்
சம்பளம் கேட்ட வேலைக்கார சிறுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: சம்பளம் கேட்ட வேலைக்காரப் பெண்ணை கொன்று துண்டுகளாக வெட்டி சாக்கடையில் வீசிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜார்கண்டைச் சேர்ந்தவர் மஞ்சித். இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜார்கண்டில் உள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்களை நல்ல வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி டெல்லி அழைத்து வருவதை தொழிலாக செய்து வந்துள்ளார். அவ்வாறு அழைத்து வரப்பட்ட பெண்களை டெல்லியில் வீட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு, அவர்களது சம்பளத்தை வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.
அந்தவகையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், 13 வயது சிறுமி ஒருவரை டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு அழைத்து வந்துள்ளார் மஞ்சித். வழக்கம் போல, அச்சிறுமியின் சம்பளத்தை அவரது குடும்பத்தாரிடம் அளிக்காமல், இவரே செலவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக இம்மாதம் 3ம் தேதி மஞ்சித்தை சந்தித்து அச்சிறுமி சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சித், தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து அச்சிறுமியை கொலை செய்து, உடலை மூன்று துண்டுகளாக்கி அருகில் இருந்த சாக்கடையில் வீசியுள்ளார்.
கடந்த 4ம் தேதி அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் சாக்கடையில் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளின் அடிப்படையில் மஞ்சித் போலீசாரிடம் சிக்கினார். தற்போது மஞ்சித்தின் கூட்டாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசாரிடம் மஞ்சித் அளித்த வாக்குமூலத்தில், 'சம்பளம் கேட்டதால் அச்சிறுமியைக் கொன்றதாக’த் தெரிவித்துள்ளார். தற்போது மஞ்சித் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.