ஆன்லைனில் மருந்து வாங்காதீர்கள்... பொதுமக்களுக்கு எப்.டி.ஏ. எச்சரிக்கை
மும்பை: ஆன்லைனில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தில் குறைபாடு இருக்கலாம் என்ற காரணத்தால், அவற்றை வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்து கழகம் (எப்.டி.ஏ.) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேரடியாக கடைகளுக்குச் சென்று வாங்க வேண்டிய தேவையில்லாமல், ஆன் லைனில் அனைத்தையும் வாங்கக் கூடிய வசதிகள் தற்போது அதிகரித்து விட்டன.
வீட்டு உபயோகப்பொருட்கள், உடைகள், பலசரக்குப் பொருட்கள் மட்டுமின்றி தற்போது மருந்துகளும் இந்தப் பட்டியலில் இணைந்து விட்டன.
எளிய முறையில்...
மருந்துக்கடைகளில் மருத்துவரின் மருந்துச் சீட்டு இருந்தால் மட்டுமே கிடைக்கும் மருந்துகள் கூட எளிதாக ஆன்லைனில் கிடைக்கிறது. இதனால் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுகிறது.
சட்டவிதிமுறைகள் இல்லை...
ஆன்லைனில் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த எந்தவித சட்ட விதிமுறைகளும் இதுவரை வகுக்கப்படவில்லை. அதனால், ஆன்லைனில் மருந்து பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தரமற்ற மருந்துகள்...
இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில மருந்து நிறுவனங்கள், தரமற்ற மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடிய மருந்துகளை விற்பனை செய்வதாக புகார்கள் வலுத்து வருகிறது.
எச்சரிக்கை...
இந்நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவு மற்றும் மருந்து கழகமான எப்.டி.ஏ. எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக எப்.டி.ஏ. அதிகாடி மாசல் கூறுகையில், "ஆன்லைனில் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை எங்களால் ஆய்வு செய்ய முடியாது. அதனால், பொதுமக்கள் ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.