For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னை இஸ்லாமியர் என அழைக்காதீர்.. நான் நாத்திகரே: சொல்வது தஸ்லிமா நஸ்ரின்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: என்னை இஸ்லாமியராக அழைக்காதீர்.. நான் ஒரு நாத்திகரே. இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார் தஸ்லிமா நஸ்ரின்.

வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் முற்போக்கான கருத்துகளை தெரிவிக்கிறார் என்பதற்காக மதவாதிகளின் எதிர்ப்புகளை எதிர்கொண்டு இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.

அவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட அவிஜித் ராய் ஒரு அறிவியல் எழுத்தாளர், சுதந்திர சிந்தனையாளர், நாத்திகவாதி, பகுத்தறிவாளர்.

வங்கதேசத்தில் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கான இடம் பறிக்கப்பட்டபோது, அவர்களுக்கான பாதையை ஏற்படுத்தியவர் அவிஜித் ராய். வங்கதேச எழுத்துலகத்துக்கு அவரது பங்களிப்பு எடை போட முடியாதது.

1980-ல் லெப்டினென்ட் ஜெனரல் ஹுசைன் முகமது எர்ஷத் தலைமையிலான ராணுவ ஆட்சியின்போது, வங்கதேசத்தை இஸ்லாமிய நாடாக மாற்ற மதசார்பற்ற அரசியலமைப்பு சட்டம் கைவிடப்பட்டது. இதற்காக 69,70-களில் நடந்த போராட்டங்களில் நானும் பங்கேற்றிருந்தேன். அப்போதைய சூழல் வேறாக இருந்தது.

மக்களால் கருத்துக்களைக் கூற முடிந்தது. பெண்கள் புர்கா அணிவது அரிதாகவே இருந்தது. ஆனால் இப்போது சமூகம் மெல்ல மாறிவிட்டது.

உதாரணத்துக்கு, அப்போது நான் எழுதிய நாத்திக சிந்தனை கருத்துக்கள் பத்திரிகைகளில் பிரபலமாக வெளியிடப்பட்டன. இப்போது அதற்கு சாத்தியமே இல்லை. கருத்துச் சுதந்திரம் என்பது இப்போது அன்னிய சொல்லாகும்.

இந்த மாற்றத்துக்கு முற்போக்கு சமூகங்களுக்கு ஓரளவு பொறுப்பு இருக்கிறது. 1994-ல் நான் வங்கதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போது ஒட்டு மொத்தச் சமூகமும் அமைதியாக இருந்தது.

அப்போது இவர்கள் குரல் எழுப்பியிருந்தால் இப்போது அவிஜித் ராய் போன்ற எழுத்தாளரை நாம் அடிப்படைவாதத்துக்கு பறிகொடுத்திருக்க மாட்டோம். இஸ்லாமியத்துக்கு எதிராக பேசியதாக அகமது ஹைதர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்.

வங்கதேசம் மொழி அடிப்படையான நாடா அல்லது மத அடைப்படையான நாடா என்பது தான் இப்போதையே பிரச்சினை. மதசார்பற்ற வங்காள மொழி அடிப்படை நாடாகவே வங்கதேசம் இருந்தது.

1952 வரை வங்காள இஸ்லாமியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் அனைவரது விருப்பமும் தங்களது மொழி வங்காளமாக இருக்க வேண்டும் என்பது தானே தவிர, உருது மொழிக்கு விருப்பப்படவில்லை.

பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து எங்களது சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டை போட்டவர்களே, இப்போது வங்கதேசத்தை இஸ்லாமியமாக்குகின்றனர்.

அறிவுஜீவிகளையும் சுதந்திர சிந்தனையாளர்களையும் அவர்கள் கொலை செய்கின்றனர். பாகிஸ்தான் முற்றிலும் இஸ்லாமியமயமான நாடு. ஆனால் வங்கதேசத்தின் அரசியல் சாசனம் மதச் சார்பற்றது.

மதச் சார்பற்ற கல்வியே இந்தச் சமூகத்துக்கு தேவை. மதராஸாக்களின் போதனை அல்ல. மதப் பிரிவினைவாதிகளின் இருப்பிடமாக வங்கதேசம் மாறுவதை அனுமதிக்கக் கூடாது.

மதம் பெண்களை துன்புறுத்துகின்றது. சட்டங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது.

கல்வி, திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் பெண்களுக்கு சம உரிமை தேவை. மதத்தின் பேரில் பெண்கள் மீது கல்லெறிவதை நிறுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

இது யாரை ஆத்திரமூட்டுகிறது. நாகரீகமடையும் நாடுகள் அனைத்தும் மத்தையும் நாட்டையும் பிரித்தே பார்க்கின்றது. மற்ற மதங்களுக்கு இருக்கும் இதே நிலை இஸ்லாமியத்துக்கு மட்டும் விதிவிலக்கானது அல்ல.

மதசார்பற்ற மனிதாபிமானத்தை வலியுறுத்தும் எனது கருத்து ஆத்திரமூட்டுவதாக இருந்தாலும் அதில் தவறில்லை.

மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. அரசு தான் என்னை குறி வைக்கிறது.

நான் அனைத்து மதத்தையும் விமர்சிக்கிறேன். குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோதும் எதிர்த்தேன். இந்து மத சாமியார்களையும் எதிர்த்தேன். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது அடக்குமுறை நடந்தபோதும் எதிர்த்தேன்.

கிறிஸ்தவர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் எதிர்த்தேன். 'பீகே', 'வாட்டர்', 'தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்' போன்ற படங்களின் எதிர்ப்பையும் எதிர்த்தேன். அதனால் என்னை இஸ்லாமியர் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு நாத்திகர்.

இஸ்லாமியர்களுக்கு சுயச் சிந்தனை இருக்கக் கூடாதா? இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா? மதத்தை விமர்சனம் செய்வதற்கு முஸ்லிம் அல்லாத அறிவுஜீவிகள்தான் தகுதிபடைத்தவர்களா? இதுவே முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கூற்று.

இஸ்லாமிய தீவிரவாதிகளை நியாயப்படுத்தினால் வங்கதேசம் மிகப் பெரிய பேரழிவை சந்திக்கும். இப்போது இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினைகள் தீரப் போவதாக தெரியவில்லை. வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

இவ்வாறு தஸ்லிமா நஸ்ரின் பேட்டியில் கூறியுள்ளார்.

English summary
Writer-in-exile Taslima Nasreen calls for reining in religious fundamentalism, saying that criticism of religion is not the domain of non-Muslim intellectuals alone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X