சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களை ஜூலை 21 வரை தகுதி நீக்கம் செய்ய கூடாது.. ராஜஸ்தான் ஹைகோர்ட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அவருக்கு ஆதரவு அளிக்கும் 18 எம்எல்ஏக்களை ஜூலை 21வரை தகுதி நீக்கம் செய்ய கூடாது என்று ராஜஸ்தான் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் திரும்பி உள்ளனர். இதன் காரணமாக அங்கு ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 100 ஆக குறைந்துள்ளது.
இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவியும் நீக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அவரின் ஆதரவு அமைச்சர்கள் இரண்டு பேரின் அமைச்சர் பதவியும் நீக்கப்பட்டு உள்ளது. அதோடு இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், பான்வர்லால் சர்மா ஆகியோர் ஆட்சிக்கு எதிராக பாஜகவுடன் சேர்ந்து சதி செய்ததாக புகார் உள்ளது.
இவர்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பேரம் பேசியதாக புகார் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது. இவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதோடு சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தானில் தங்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் தற்போது பரபரப்பு விசாரணை நடந்து வந்தது.
ராஜஸ்தான் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் இந்திரஜித் மஹந்தி மற்றும் பிரகாஷ் குப்தா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். இதில் பாஜக கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நீக்க சதி செய்கிறது. குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள். இதனால் தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று வாதம் வைத்துள்ளது.
வசுந்தர ராஜே கொடுத்த 'சிக்னல்..' சிக்கிக் கொண்ட சச்சின் பைலட்.. அசோக் கெலாட் அதிரடியின் பின்னணி
அதே சமயம் சச்சின் பைலட் தரப்பு தங்கள் வாதத்தில், எங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தை பயன்படுத்த முடியாது. கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பது கட்சி தாவுவதாக அர்த்தம் கிடையாது. இது கருத்து சுதந்திரம். இது மோதல் கிடையாது. இதற்கு எல்லாம் கட்சி தாவல் தடை சட்டத்தை கொண்டு வருவது தவறான விஷயம். சட்டசபையில் நடக்கும் விவாதத்திற்கு மட்டுமே விப் நோட்டீஸ் பொருந்தும்.
வெளியே நடக்கும் காங்கிரஸ் மீட்டிங்குகளுக்கு விப் நோட்டீஸ் பொருந்தாது. இவர்கள் யாரும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் செயல்படவில்லை. முதல்வரை மட்டுமே மாற்ற வேண்டும். ஆட்சியை கலைக்க வேண்டுமென்று நாங்கள் கூறவில்லை என்று சச்சின் பைலட் தரப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அவருக்கு ஆதரவு அலைக்கும் 18 எம்எல்ஏக்களை ஜூலை 21வரை தகுதி நீக்கம் செய்ய கூடாது என்று ராஜஸ்தான் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு அதற்குள் சமாதானம் முயற்சிகள் நடக்குமா, சச்சின் பைலட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.