பாரத ரத்னா விருதுக்கு தலித் தலைவர்கள் பெயர்கள் புறக்கணிப்பு: மாயாவதி குற்றச்சாட்டு
லக்னோ: பாரத ரத்னா விருதுக்கு தலித் தலைவர்களை தேர்ந்தெடுக்காமல் பாஜக அரசு புறக்கணிக்கிறது என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவியுமான மாயாவதி தெரிவித்தார்.
நிருபர்களுக்கு இதுறித்து மாயாவதி அளித்த பேட்டி: பாஜக தலைமையிலான அரசு, மத்தியில் பதவிக்கு வந்து ஏழரை மாதங்கள் தாண்டிவிட்டது. இருப்பினும், சமூகத்தில் கீழ் நிலையிலுள்ள ஏழை-எளிய மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும், சிறுபான்மையினருக்கும் இந்த அரசு எந்த ஒரு நலத்திட்டங்களையும் கொண்டுவரவில்லை.
அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு முயலவில்லை. கருப்பு பணம், ஏழைகள் மேம்பாடு போன்றவறை தொடர்பாக பாஜக தலைவர்கள் கூறிய உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
வாஜ்பாய், மாளவியா போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கும் நிலையில், தலித் தலைவர்களை பாரத ரத்னாவுக்கு தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்துள்ளனர். இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.