ரூ.5 கோடி அபராதம் கட்ட முடியாது.... ஜெயிலுக்கு போகவும் தயார்.. சொல்வது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
டெல்லி: யமுனை நதிக்கரை ஓரத்தில் விதிமுறைகளை மீறி நிகழ்ச்சி நடத்துவதற்கு அபராதமாக ரூ5 கோடி கட்ட வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது; அபராதம் கட்ட முடியாது என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
டெல்லி யமுனை நதிக்கரையில் 1,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உலக கலாசார நிகழ்ச்சியை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்காக மத்திய அரசும் ரூ2.2 கோடி நிதி உதவி அளித்திருக்கிறது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகுமாறு கூறிய உச்சநீதிமன்றம், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டபடி ரூ5 கோடி அபராதம் கட்ட முடியாது என்று கூறியிருக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். இது குறித்து அவர் கூறுகையில், அபராதம் கட்ட முடியாது; இதற்காக நீதிமன்றம் என்னை சிறைக்கு அனுப்ப விரும்பினால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கான கட்டுமானங்கள் அனைத்தும் தற்காலிகமானவை. நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைத்தும் கலைக்கப்பட்டுவிடும் என்றார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார். அவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், யமுனை நதிக்கரை நிகழ்ச்சிக்காக அதிகாரிகளை நோக்கி பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன; ஆனால் உண்மையில் யமுனை துர்நாற்றம் வீசக்கூடிய சாக்கடை வடிகாலாகத்தான் இருக்கிறது. யமுனை நதி தூய்மைப்படுத்தப்பட்டு அதன் கரைஓரங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
தற்போது வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் ரூ5 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. யமுனை நதிக்கரை நிகழ்ச்சி சட்டப்பூர்வமானதா? அல்லது இல்லையா? என்பதற்கு அப்பால் முன்கூட்டியே அபராதம் விதிப்பது என்பது முன் ஜாமீன் பெறுவதைப் போலத்தான் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.