இந்தியாவைக் காக்க 56 'இன்ச்' நெஞ்சு தேவையில்லை, பரந்த மனது போதும் - மோடிக்கு பிரியங்கா 'கொட்டு'!
ரேபரேலி: இந்தியாவை வழி நடத்த அகன்று பறந்து விரிந்த 56 இன்ச் மார்பு தேவை என்று கூறுகிறார் நரேந்திர மோடி. ஆனால் அது தேவையில்லை, பெரிய மனதுதான் தேவை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
கோரக்பூரில் நடந்த பிரசாரம் ஒன்றில் பேசிய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் குஜராத்தை போல உத்தரபிரதேசத்தை மாற்ற விடமாட்டோம் என்கிறார். அவ்வாறு குஜராத்தை போல மாற்றுவது என்றால் என்ன என்று அவருக்கு தெரியுமா?
24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம். வருடத்தின் 365 நாட்களும் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், தெருக்களிலும் மின்வெட்டு இல்லாத நிலை. இதுதான் குஜராத்தை போல மாற்றுவது. அதை முலாயம் சிங்கால் செய்ய முடியாது. அந்த தைரியம் அவருக்கு கிடையாது. அதற்கு 56 இன்ச் மார்பு வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார். ரேபரேலி தொகுதியில் தனது தாயாருக்கு ஆதரவு திரட்டி அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டை வழிநடத்த 56 இன்ச் மார்பு தேவையில்லை, பெரிய மனசுதான் தேவை. நாடு தற்போதுள்ள சூழ்நிலையில், விரிந்த மார்பு கொண்ட ஒரு தலைவர் தேவையில்லை. பரந்த இதயம் கொண்ட ஒருவரே பிரதமராக வேண்டும்.
இந்த மாபெரும் நாட்டை வழி நடத்த பெரும் பலம் தேவையில்லை. மாறாக மன வலிமைதான் முக்கியம். இதுபோன்ற பலம்தான் நாட்டை வழி நடத்துமே தவிர உடல் பலம் தேவையில்லை.