எதிர்பாராத தீர்ப்பு இது... மக்கள் அமைதி காக்க வேண்டும்: சதானந்த கவுடா
பெங்களூரு : எதிர்பாராத தீர்ப்பு இது... காவிரி விவகாரத்தில் மக்கள் உணர்ச்சி வசப்படுவது இயல்பானது. ஆனால், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20ம் தேதி வரை தினமும் 12,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கர்நாடகாவில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவினை ஏற்று தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
உச்சநீதிமன்றத்தில் இருந்து இதுபோன்ற தீர்ப்பை கர்நாடக மக்கள் எதிர்பார்க்கவில்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிக்கு உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அனுப்பி, நீர்த்தேங்கங்களில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்யும் என்றும், அவர்களிடம் இருந்து தகவல்களை பெற்ற பின்னர் முடிவுக்குவரும் என்றும் நினைத்தோம். ஆனால் அது நடைபெறவில்லை.
இதுபோன்ற நிலையில் மக்கள் உணர்ச்சி வசப்படுவது இயல்பானது. ஆனால், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். காவிரி விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் சதானந்த கவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.