கடவுளையும், அரசையும் நம்பி இருக்காதீர்கள்: விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் கட்காரி அறிவுரை
அமராவதி: கடவுளையும், அரசையும் நம்பியிருப்பதை முதலில் நிறுத்துங்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த க்ரிஷி விகாஸ் கண்காட்சியின் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது பலரையும் வியக்க வைத்துள்ளது.
நிகழ்ச்சியில் கட்காரி கூறியதாவது,
கடவுளையும், அரசையுமே நம்பி இருக்காதீர்கள். விவசாயிகள் தங்களை நிலைமையை மேம்படுத்த புதிய முயற்சிகள் எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வடிவமைக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் உங்களின் சமூக வாழ்க்கையை நீங்களே மாற்ற முடியும்.
விளைச்சல் இல்லாதபோதிலும் மனமுடைந்துவிடாதீர்கள். விதர்பா விவசாயிகளுக்காகவே இந்த விவசாய கண்காட்சி நடத்தப்படுகிறது. நிபுணர்களிடம் பேசி புதிய தொழில்நுட்பங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
புதிய தொழில்நுட்பத்தின் தேவையை விதர்பா விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையில் இருந்தாலும் சோர்ந்துவிடக் கூடாது. பிரச்சனைகளில் இருந்து வெளியே வர வழி தேட வேண்டும் என்றார்.