குழந்தைக்கு தாய்ப்பால் தரும் எழுத்தாளர்.. தாய்மையை சிறப்பித்த மலையாள இதழ்!
Recommended Video
திருவனந்தபுரம்: கேரள பெண் எழுத்தாளரும், மாடலுமான ஜிலு ஜோசப், மலையாள இதழ் ஒன்றுக்கு கொடுத்துள்ள துணிச்சலான 'போஸ்தான்' இப்போது கடவுளின் தேசத்தையே கதகதக்க வைத்துள்ளது.
மலையாளத்தில் வெளியாகும், மாதமிருமுறை இதழான கிரிஹலட்சுமி (Grihalakshmi) இந்த புரட்சிக்கு விதை போட்டுள்ளது.
பொது வெளியில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில், பார்க்க கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக அந்த இதழ், 27 வயதாகும், ஜிலு ஜோசப்பை அணுகியபோது அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் இந்த ப்ராஜக்டுக்கு சம்மதித்தாராம்.
அட்டைப்படம்
இவ்வாரம் வெளியான அந்த இதழின் அட்டை படத்தில், ஜிலு ஜோசப் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காட்சிதான் அட்டைப்படமாக வெளியாகியுள்ளது. மலையாள இதழியல் வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற துணிச்சலான போட்டோ அட்டைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை.
பாராட்டுகள்
இதழ் அட்டை படத்தை பார்த்து முதலில் அதிர்ந்தவர்கள் கூட, அதன் நோக்கத்தை அறிந்ததும், "சபாஷ், சரியான முயற்சி" என பாராட்டி வருகிறார்கள், கேரளா மட்டுமில்லாமல் நாடு முழுக்கவுமே சோஷியல் மீடியாக்களில் இதழுக்கும், ஜிலு ஜோசப்புக்கும் பாராட்டுகள் குவிகின்றன. ஒரு சிலர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.
இயல்பானது
இதுகுறித்து ஜிலு ஜோசப் கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பது என்பது இயல்பான நிகழ்வு. இது பெண்களுக்கு கிடைத்துள்ள வரம். இதை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் மீதுதான் தப்பு உள்ளதே தவிர, தாய்ப்பால் கொடுக்கும்போது மறைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதன் நல்ல நோக்கத்தை உணர்ந்துதான், நான் மறுபேச்சு பேசாமல் இந்த ப்ராஜக்டுக்கு சம்மதித்தேன் என்கிறார்.
குடும்பத்தார் எதிர்ப்பு
குமுளி (தேக்கடி) பகுதியில் ஜிலு ஜோசப் மூத்த சகோதரி கன்னியாஸ்திரியாக உள்ளார். அவரும், ஜிலு ஜோசப்பின் தாயும், இதுபோல போஸ் கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தினராம். ஆனால், அவர்கள் கருத்தை நான் மதித்தபோதிலும், எனக்கு சரி என தோன்றியதை நான் செய்துவிடுவேன் என்பதால், மறுப்பு தெரிவிக்காமல் இந்த போட்டோக்களுக்கு சம்மதம் தெரிவித்தேன் என்கிறார் ஜிலு ஜோசப்.
நாடு முழுக்க புகழ்
ஜிலு ஜோசப் மாடல் மட்டுமல்ல. கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமான பணிப்பெண் என பன்முக திறமை கொண்டவர். இந்த போட்டோக்கள் மூலம் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றுள்ளார்.