சிங்கத்தோடு செல்பி வேண்டாம்... சுற்றுலாப் பயணிகளுக்கு குஜராத் வனத்துறை எச்சரிக்கை
அகமதாபாத்: கிர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிங்கத்துடன் செல்பி புகைப்படம் எடுக்கக் கூடாது என குஜராத் வனத்துறை எச்சரித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஜுனாகத், சோம் நாத், அம்ரேலி மாவட்டங்களுக்கு உட்பட்ட 1412 கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது கிர் தேசிய பூங்கா. கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்த கிர் வனப்பகுதியில் மட்டும் 523 சிங்கங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆசிய சிங்கங்களின் சரணாலயம் எனக் குறிப்பிடப்படும் இந்தப் பூங்காவில் சிங்கங்கள் மட்டுமின்றி வங்கப் புலிகள், சிறுத்தைகள், மான்கள், முதலைகள், எருதுகள், மலைப் பாம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.
எனவே, கிர் பூங்காவைச் சுற்றிப்பார்க்க தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களில் பலர் பூங்காவின் உட்பகுதியில் விலங்குகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக சிங்கங்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர். இது பல சமயங்களில் ஆபத்தாக முடிந்து விடுகிறது.
அண்மையில், கிர் வனப்பகுதியில் 14 வயது சிறுவன், ஒரு பெண் உட்பட 3 பேர் சிங்கம் தாக்கி உயிரிழந்தனர். எனவே, உயிரிழப்புகளைத் தடுக்க சிங்கத்துடன் செல்பி எடுக்க சுற்றுலாப் பயணிகள் முயற்சிக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக குஜராத் மாநில வனத் துறை தலைமை பாதுகாவலர் சிசோடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கிர் வனப்பகுதியில் சிங்கங்களுடன் செல்பி புகைப்படம் எடுக்க இளை ஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைப்பது கவலை அளிக்கிறது. சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்க்க இத்தகைய விபரீத செல்பி முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
செல்பி புகைப்படம் எடுக்க சிங்கங்களுக்கு மிகவும் அருகே இளைஞர்கள் செல்கின்றனர். இது உயிருக்கே ஆபத்தாக முடியும். மேலும் சட்டப்பூர்வமாகவும் இது தவறான நடவடிக்கை. எனவே சுற்றுலா பயணிகளும் உள்ளூர்வாசிகளும் சிங்கத்தோடு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த உத்தரவை மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.