அனுமனை விட்ருங்க.. தேவையில்லாமல் தொட்டால் காணாம போய்டுவீங்க… பாஜகவுக்கு ராஜ் பப்பர் வார்னிங்
லக்னோ: அனுமார் குறித்து சர்ச்சையான கருத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததால்தான் 3 மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததாக காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நடிகருமான ராஜ் பப்பர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் பங்கேற்று பேசினார். அப்போது, அனுமர் ஒரு தலித் என்று கூறவே, சர்ச்சை எழுந்தது.
அவரை பின்தொடர்ந்து அவரது அமைச்சரவை சகாக்களும் அனுமர் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர் எங்கு பிறந்தார், அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்ற ஆராய்ச்சியில் இறங்க தொடங்கினர்.
அனுமன் ஜாட் சமூகத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என உ.பி. மாநில சமயநிலைத்துறை அமைச்சர் கருத்து கூறி உள்ளார். அதனால், அம்மாநில முதல்வர் யோகி, அனுமர் மீது துவக்கிய சர்ச்சை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அம்மாநில காங்கிரஸ் தலைவரும், நடிகருமான ராஜ் பப்பர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
"உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று பேசினார். அப்போது அனுமர் ஒரு தலித் என்று கூறியது நாட்டுமக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததோடு, ஏனைய சாதி அமைப்பினர்கள் அனுமர் எங்கள் குலத்தை சேர்ந்தவர் என்று போர்க்குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
அனுமர் வாலில் பாஜக தற்போது பற்றவைத்த நெருப்பு தான், 3 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைய காரணம். உங்கள் இலங்கை ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த சர்ச்சையை கிளப்பினால், ராமாயணத்தில் அனுமர் லங்காவை முழுவதுமாக எரித்தது போல் உங்களது கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
உத்தரபிரதேச விளையாட்டுத் துறை அமைச்சர் சேத்தன் சவுகான், அனுமர் மல்யுத்தம் செய்வார், அவர் ஒரு விளையாட்டு வீரர் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ராஜ் பப்பர், இந்த கருத்தை முன் வைத்து பேசியுள்ளார்.