ஹிட்லரின் நாசிசத்தை குறிக்கும் Nationalism என்ற சொல்லே வேண்டாம்... ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் அட்வைஸ்
ராஞ்சி: சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிச கோட்பாட்டை குறிக்கக் கூடிய தேசியவாதம் (Nationalism) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசியவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தொடருகின்றன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேசியவாதமே முதன்மையானது; அவசியமானது என குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் பாஜகவின் அடையாளமே தேசியவாதம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோல், இந்தியா போன்ற மிகப் பெரிய தேசத்தில் தேசியவாத கோட்பாடு இல்லாமல் இருக்க முடியாது என அமித்ஷாவும் கூறியிருந்தார்.
பாஜகவின் பல தலைவர்களும் கூட தேசியவாதம், நாட்டுப்பற்று என்கிற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அண்மைக்காலமாக தேசியவாதம் -nationalism என்ற சொல்லை நிராகரித்தே வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், தேசியவாதம் என்றாலே ஹிட்லர், முசோலினியின் கோட்பாடுகளை நினைத்து மக்களை அச்சுறுத்தக் கூடிய சொல்லாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தேசியவாதம் என்பது அப்படியான கோட்பாடுகளின் கீழ் இல்லை என கூறியிருந்தார்.
இந்த 3 கல்லூரி மாணவர்கள் நாக்கை கொண்டு வாங்க.. ரூ.3 லட்சம் பிடிங்க.. ஸ்ரீராமசேனா பகீர் அறிவிப்பு
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இணை பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா கடந்த வாரம் கூறுகையில், தேசியவாதம் என்பது மேற்கத்திய சித்தாந்தம். பாசிசத்தைப் போன்றது தேசியவாதம். தேசப் பற்று என்பதற்கும் தேசியவாதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராஞ்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீண்டும் தேசியவாதம் என்பது நாசிசத்தை குறிப்பிடுகிறது. ஆகையால் அந்த சொல்லை தவிர்க்க வேண்டும். தேசம், தேசிய இனம் போன்ற சொற்களை பயன்படுத்தலாம் என கூறியிருக்கிறார்.