ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு செல்லாதீர்கள்: மத்திய அரசு அறிவுரை
டெல்லி: ஜிக்கா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஜிக்கா வைரஸ் பிற நாடுகளுக்கும் மெல்ல மெல்ல பரவி வருகிறது. இந்தியாவில் யாருக்கும் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு பயண நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,
ஜிக்கா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு செல்லும் பயணிகள், தனிப்பட்ட பாதுகாப்பு முறையை உறுதி செய்து கொள்ள வேண்டும். வைரஸ் பாதித்த நாடுகளுக்கு அவசியமில்லாமல் யாரும் செல்ல வேண்டாம். அந்த பயணங்களை தள்ளி போடுங்கள் அல்லது ரத்து செய்யுங்கள். குறிப்பாக கர்ப்பமான பெண்கள் மற்றும் கர்ப்பமாகும் சாத்தியம் உள்ள பெண்கள் அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.
ஜிக்கா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஜிக்கா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் இல்லை. வைரஸ் குறித்து சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்படும். வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள், சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், சுகாதாரத்துறை பொது இயக்குனர் தலைமையில் கூட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வைரஸ் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளோம். டெல்லி தேசிய நோய் தடுப்பு மையத்தில் வைரஸ் ஒழிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.