சந்திரயான், ககன்யான் திட்டங்கள் பெரிய விஷயம் என பாராட்டிய டொனால்ட் டிரம்ப்
அகமதாபாத்: இரு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரோவின் சந்திரயான், ககன்யான் திட்டங்களை பாராட்டினார்.
இன்றும் நாளையும் இந்திய மண்ணில் தங்கவுள்ள டொனால்ட் டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு சென்றார். அங்கு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நமஸ்தே என கூறி தனது உரையை தொடங்கினார். அவர் பேசுகையில் சந்திரயான் திட்டம் போன்ற மகிழ்ச்சிகரமான திட்டங்களால் இந்தியா அனைவரையும் ஈர்க்கக் கூடிய முன்னேற்றங்களை செய்து வருகிறது. வேகமாகவும் முன்னேறி வருகிறது.
விண்வெளித் துறையில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு நல்ல அமெரிக்கா விரும்புகிறது. உங்கள் வரம்புகளை மீறி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மூலம் இலக்குகளை அடைகிறீர்கள். அது பெரிய விஷயம்.
இந்தியாவும் அமெரிக்காவும் எப்போதும் நட்பு நாடுகளாகவே இருக்கும். அதிலும் விண்வெளித் துறையில் எங்கள் பயணத்தில் நட்பு இருக்கும் என்றார். அடுத்த ஆண்டு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ ஈடுபடவுள்ளதாகவும் சந்திரயான் 3 மூலம் லேண்டருக்கு பாதிப்பில்லாத வண்ணம் தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 2 திட்டத்தை விண்ணில் செலுத்திய போது அதனுள் இருந்த லேண்டர் சாப்ட் லேண்டிங் மூலம் தரையிறங்காமல் நிலவின் தென்துருவத்தில் சாய்வு தளமாக விழுந்தது. இதனால் இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோவுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவும் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.